பா.ம.கவின் கவர்ச்சி திட்டம்: விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு விளைபொருள்கள், உரங்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.

திருச்சி திருவானைக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் “வேளாண் புரட்சி’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

இஸ்ரேல் நாட்டில் மண்வளம் பெரிய அளவில் இல்லை. ஆனால், அங்கு பல்வேறு புதுமைகளை புகுத்தி விவசாயம் செய்வதால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர். தமிழகத்தில் எல்லா மண்வளங்களும் இருந்தும் விவசாயத்தில் புதுமை புகுத்தப்படவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் கோவையில் உள்ளதுபோல, தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய இடங்களிலும் வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். இஸ்ரேல், நெதர்லாந்து நாட்டில் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, இங்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு எவ்வித இலவசப் பொருள்களையும் தரமாட்டோம். கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்போம். அதுபோல, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், காப்பீடு, கருவிகள், ஒரு ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவோம்.

விவசாயிகளுக்கு 5 குதிரைத்திறன் கொண்ட சூரியசக்தி மோட்டார்களை வழங்குவோம்.

தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் விளையும் விவசாயப் பொருள்களுக்கான வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், மதிப்புக்கூட்டப்பட்டு விளைபொருள் விற்பனைக்கு அனுப்பப்படும்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திக்கு ஆகும் செலவைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவிகித விலை நிர்ணயித்து வழங்கப்படும்.

மேலும், விவசாயிகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

இந்த நிகழ்வில் பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துபேசினார்.

-http://www.dinamani.com

TAGS: