விருத்தாச்சலம் சம்பவம்… ஜெ. மீது வழக்குப்பதிவு செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை

Jayalalithaa_pointing_fingerசென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.

விருத்தாச்சலத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் வெளியேற முற்பட்ட போது நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், கடலுார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் வந்த தொண்டர்கள், காலை முதல், சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கிய சற்று நேரத்தில், வெயில் கொடுமை காரணமாக சிலர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிகிறது. மேலும் அதில் 15க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தினால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்ததால் மயக்கம் அடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகர டேவிட், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இறந்தனர்.

மக்களை மதிக்காமல் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வைத்து எந்த வித மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதியையும் செய்யாமல் இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் ஜெயலலிதா போகும் இடங்களில் நடக்கிறது.

இதுபோன்ற கூட்டத்தில் போலீசாரின் கவனம் முழுவதும் ஜெயலலிதாவை கவனிப்பதிலேயே குவிகிறது. எனவேதான் மக்களை கண்காணிப்பதில் கவனச்சிதறல் ஏற்பட்டு இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதற்க்கு மாநில முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் ஆம் ஆத்மி கோரிக்கை வைக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: