ஆந்திரப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு விற்பனையா? நடவடிக்கைக்கு கோரிக்கை

womenஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்களை வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஆந்திரப் பெண்கள், விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுத்து அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் வீட்டு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். அவ்வாறு வீட்டு வேலைக்காக ஆந்திராவில் இருந்து சென்ற பெண்கள் பலர் பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டு, கடும் சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஆந்திர மாநில என்ஆர்ஐக்கள் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி கூறுகையில், அந்தப் பெண்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களை மீட்டு உடனடியாக நாட்டுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் அரசுகளுடன் பேசி இந்த விவகாரத்தை விரைவில் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் 60 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விபரத்தகவல் தெரிவிக்கிறது.

இவர்களில் பல பெண்களும் அடக்கம். தங்களது குடும்ப சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் வீட்டுவேலை செய்ய வரும் பெண்களில் பலரும் முகவர்களாலும், வேலையில் சேரும் இடத்தில் உள்ள முதலாளிகளாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர்.

ஆந்திரா மட்டுமல்லாமல் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்களும்கூட பெருமளவில் இதுபோல ஏமாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்களை விற்பது போல விற்பனை செய்கிறார்கள் என அமைச்சர் பல்லே ரெட்டி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் ஒரு பெண்ணிற்கு குறைந்தது ரூ. 4 லட்சம் விலை வைக்கப்படுகிறதாம். பஹ்ரைனில் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் விலை நிர்ணயிக்கப்படுகிறதாம்.

சமீபத்தில் வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட 25 பெண்கள் அரசிடம் உதவி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் ஆந்திர மாநில அமைச்சர்கள் குழு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க சவுதி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: