தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள்: மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் குற்றம் இழைப்போர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் வலியுறுத்தினார்.

தலித்துகள் மீது அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.கே.பிஜு வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது, ஒட்டுமொத்தமாக தலித்துகளின் மோசமான நிலை குறித்து அவர் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டார். பிஜு பேசியதாவது:

தினந்தோறும் மூன்று தலித் பெண்கள் வீதம் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். தலித்துகளுக்கு எதிராக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் அந்த சமூகத்தைச் சேர்ந்த 37.8 சதவீத மாணவர்கள் தனியாக அமர வைக்கப்படுகின்றனர். தலித்துகளில் 24.5 சதவீதம் பேர் புகார் அளிப்பதற்காக காவல் நிலையங்களுக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவதில்லை.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சில அமைப்புகள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவது பற்றி பிரதமர் மோடி அண்மையில் கருத்து தெரிவித்தார். வெறும் வார்த்தைகளோடு நின்று விடாமல் இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றார் பி.கே.பிஜு.

இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் பங்கேற்று, நாடு முழுவதும் தலித்துகளின் மோசமான நிலை குறித்துப் பேசினர். காங்கிரûஸச் சேர்ந்த கே.எச்.முனியப்பா பேசுகையில், “குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல் என்பது, வரலாறு முன்னெப்போதும் கண்டிராத அளவுக்குச் சென்று விட்டது’ என்று குற்றம்சாட்டினார்.

உள்துறை அமைச்சர் பதில்: மக்களவையில் 6 மணிநேரத்துக்கு நீடித்த இந்த விவாதத்துக்குப் பதிலளித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தலித்துகள் மீதான தாக்குதல் விவகாரத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது. இந்த அநீதிக்கு முடிவுகட்ட இதை ஒரு சவாலாக நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு ஜாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். “உலகமே ஒரு குடும்பம்’ என்பதில் நமது முன்னோர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சில சமூக விரோத சக்திகள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன. குற்றம் இழைப்போருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

தலித்துகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக நாம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். முன்பு இத்தகைய திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை.

தலித்துகள் மீதான தாக்குதல் விவகாரத்தில், கட்சிகள் ஒன்றையொன்று வசைபாடிக் கொண்டிருப்பது தீர்வாகாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரமளிக்கப்படாத வரை நம்மால் முன்னேற்றம் காண இயலாது.

குஜராத் மாநிலம், உனாவில் நடைபெற்ற தாக்குதலானது வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ராஜ்நாத் சிங்.

அவரது விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

-http://www.dinamani.com

TAGS: