2 வகையான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து மோசடி: பாஜகவின் ரகசியம் அம்பலம்

பாஜக ரகசியமாக 2 வகையான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

500 ரூபாய் நோட்டு மாதிரிகளின் படங்களுடன் வந்திருந்த அவர், அவற்றை சபாநாயகர் மற்றும் சக உறுப்பினர்களிடம் காட்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏன் மத்திய அரசு மேற்கொண்டது என்று இன்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். ரிசர்வ் வங்கி இருவகையான 500 ரூபாய் நோட்டுகளை இருவேறு அளவுகள் மற்றும் டிசைன்களில் வெளியிட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இரு அளவுகளில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மிகப்பெரிய ஊழல் செய்யப்பட்டுள்ளதாக கபில்சிபில் குற்றம்சாட்டியதை அடுத்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த அருண் ஜெட்லி கூறியதாவது, இத்தகைய ரூபாய் நோட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ரூபாய் நோட்டுகளில் சிறிய அளவிலான வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்த அவர், வெவ்வேறு பிரிண்டிங் பிரஸ்களில் பணம் அச்சடிக்கப்படுவதால் அளவு மற்றும் டிசைன்களில் இத்தகைய சிறிய வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும், அரசு இருவகைகளில் பணத்தை அச்சடித்துத் தரக் கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

-lankasri.com

TAGS: