காவிரி விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் கர்நாடக உணவுத்துறை மந்திரி பேட்டி

cauvery-water‘வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்டு புரட்சி தினம்’ சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், சிவ ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கர்நாடக மாநில உணவுத்துறை மந்திரி யு.டி. காதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

மூத்த தலைவர் குமரிஅனந்தன், கம்பன் கழகத்தின் துணை செயலாளர் பால சீனிவாசன், கல்லூரி மாணவி ஆர்.ஐஸ்வர்யா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேடையில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்துக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

விழாவில் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:-

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7, 8 ஆகிய 2 நாட்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய காந்தி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கமிட்டார். அதன் பின்னர் விடுதலை போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியது. 1947-ம் ஆண்டு சுதந்திர சுடர் ஒளி ஏற்றப்பட்டது.

தேசத்தை காப்பாற்றுவதற்காக ‘வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தி கூறினார். தற்போது மத்திய பா.ஜ.க. அரசு மதம், சாதி, மொழி, கலாசாரம், உணவு பழக்க வழக்கம் போன்றவற்றில் மக்களை பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்து வருகிறது. எனவே பா.ஜ.க. அரசை வெளியேற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக மந்திரி பேட்டி

Cauvery1நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் கர்நாடக உணவுத்துறை மந்திரி யு.டி. காதரிடம், காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

காவிரி பிரச்சினை என்பது தற்காலிகமானது தான். கர்நாடகாவில் 42 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருவதால், காவிரி விவகாரத்தில் தீர்வு ஏற்படுவதில் சிக்கல் காணப்படுகிறது.

இவ்விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கர்நாடகாவில் தமிழர்களும், கன்னடர்களும் நெருங்கிய சகோதரர்களாக வசித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில் கன்னட மொழி கட்டாயமாக்கப்பட்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘மத்திய பா.ஜ.க. அரசு இந்தி திணிப்பை கொள்கையாக கொண்டுள்ளது. மொழி பிரச்சினையால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தை அறிந்து கொள்ள பிராந்திய மொழிகள் அவசியம் ஆகும்.’ என்றார்.

குஜராத் எம்.பி., தேர்தலில் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேலின் வெற்றியை தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் செல்வ பெருந்தகை, அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன் உள்பட நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் கொண்டாடினர்.

-dailythanthi.com

TAGS: