கோரக்பூர் துயரம்: இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல – அமித்ஷா

amit shahஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மேலும் 9 குழந்தைகள் உயிர் இழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம், இது படுகொலை சம்பவம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும் மூளை அழற்சி காரணமாகத்தான் குழந்தைகள் இறந்தன என்று மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா மறுத்தார். எனினும் முதல் கட்ட நடவடிக்கையாக டாக்டர் மிஸ்ரா, துணை முதல்வர் கபீல் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அரசின் அலட்சியத்திற்கு மருத்துவர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் அமித் ஷா, ராஜினாமா செய்யக்கூறுவது காங்கிரஸ் கட்சியின் வேலையாகும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இதுபோன்ற பல சம்பவங்கள் முந்தைய காலகட்டங்களில் நடந்து உள்ளது. இது முதல் முறையாக நடக்கவில்லை, என கூறிஉள்ளார்.

-dailythanthi.com

TAGS: