மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி; 39 பேர் காயம்

மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

காலையில் பெய்த கனமழையை அடுத்து, எஸ்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.

காலை சுமார் 10.50-க்கு அந்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டது. அதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் படுகாயமடைந்த பலர் கெம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கெம் மருத்துவமனையின மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவிண் பங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் பலருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர்.

இந்த ரயில் நிலையம்தான், நகரின் இரண்டு முக்கிய ரயில் சேவை தடங்களை இணைக்கிறது. -BBC_Tamil

TAGS: