”நச்சுப் புகையால் டெல்லியில் இருக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம்”

டெல்லியில் நச்சுப்புகைமூட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குகிறார் டெல்லியில் பணிபுரியும் மருத்துவர் சுந்தர் ராஜன்.

கேள்விமாசுபாடு அதிகரிக்கும்போது, முகமூடி அணிந்து கொள்வது நல்லதா? இந்த முகமூடிகள் மிக சிறய துகள்களை தடுக்கின்றனவா?

பதில்டெல்லி மாசுபாட்டில் பிஎம்10 அளவுக்கு கீழுள்ள துகள்கள் அதிகமாக உள்ளன. எனவே சாதாரண முகமூடிகள் இந்த துகள்களை தடுப்பதில்லை.

3எம் என்கிற முகமூடிகள், பிஎம்3 என்ற அளவுடைய துகள்களை தடுக்கின்ற சக்தியுடையவை. இதற்கு ஐஎஸ்ஓ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி – ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தோன்றிவிடுகின்ற இதுபோன்ற மாசுபாட்டிற்கு காற்றை சுத்தப்படுத்தும் எந்திரம் ஒரு தீர்வாக அமையுமா?

பதில் – ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுத்தமற்ற காற்று கிடைப்பதை தடுப்பதற்கு காற்றை சுத்தப்படுத்தும் எந்திரத்தை ஒரு தீர்வாக பயன்படுத்தலாம். ஆனால், ஒரு நகரமும், அதன் சுற்றுவட்டாரமும் மாசுபாட்டுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், காற்றை சுத்தப்படுத்தும் எந்திரம் இருந்தாலும், அதனை நிவர்த்தி செய்வது மிகவும் கடினம். அதற்கு வேறுவித முறைகளைதான் மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி – டெல்லியில் மாசுபாடு 30 மடங்கு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது, இந்திய மருத்துவ கழகம் இந்நிலை அபாகரமானது என்று கூறியுள்ளது. அரசு செய்ய வேண்டியது என்ன?

பதில் –உணவு, உடை, உறைவிடம் போல மனிதர்களுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதி சுவாசிக்க காற்று. அந்தக் காற்று கூட இங்கு நல்ல நிலையில் இல்லாதது வேதனை அளிக்கிறது. அரசு தேவையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் மூடியுள்ளது. நகரத்திற்குள் எந்த டிரக்கும் வரக்மூடாது என்று ஆணையிட்டுள்ளது. இதை அவர்கள் முன்னரே செய்திருக்கலாம்.

மேலும், நம்முடைய சுய தேவைகளை குறைத்து கொள்வதால், மாசுபாடுகளை குறைக்கலாம். தனி நபர் வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சுள்ளிகளைக் கொழுத்துவது மட்டுமல்லாமல் வாகனப்புகையும் இதற்கு ஒரு காரணம்.

கேள்வி – டெல்லி மற்றும் அதன் சுற்றுபுறங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள் இத்தகைய அவசர நிலைமைக்கு தயாராக உள்ளனவா? ஆஸ்மா தடுப்புக்கும், சுகாதரா சீர்கேடு ஏற்பட்டால் சமாளிப்பதற்கும், தயாராக உள்ளனவா?, மாசுபாடு ஏற்பட்டுவிட்டால், முறையாக அறிவிக்கப்பட்ட மருத்துகள் உள்ளனவா?

பதில் – மாசுபாட்டிற்கு என்று அறிவிக்கப்பட்ட மருந்து வகைகள் எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. காலையில் நீண்ட தொலைவு நடப்பவர்களாக இருந்தால், மாசுபாடு சமயங்களில் அவ்வாறு செய்யாமல் இருப்பது நல்லது. மதியம் சற்று தொலைவு நடக்கலாம். காலை அல்லது மாலை உடற்பயிற்சி மேற்கொள்வதை இந்த வேளைகளில் குறைத்து கொள்ள வேண்டும்.

கேள்வி – இதுமாதிரியான மாசுபாட்டால், நீண்ட காலத்தில் புற்றுநோய் போன்றவை வருவதற்கு சாத்தியம் உண்டா?

பதில் – இது மாதிரியான சூழ்நிலைகளால், நீண்ட கால பிரச்சனையாக புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறு உண்டு. அத்தகைய நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பதுதான் உண்மை.

டெல்லியில் புகை பிடிப்பவர், புகை பிடிக்காதவர் என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. டெல்லியில் இருந்தாலே நீங்கள் புகை பிடிப்பவர்தான். டெல்லியில் இருப்பவர்கள் தினமும் 50 முதல் 100 சிகரெட் பிடிக்கும் அளவுக்கு புகையை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி – நச்சுப்புகையுடன் வீசும் பனிக்காற்றும் மாசின் வீரியத்தை அதிகரிக்கிறதா?

பதில் – டெல்லியில் இன்னும் குளிர் காற்று வீச ஆரம்பிக்கவில்லை. குளிர் காற்று வீசத் தொடங்கி காற்றின் வேகம் அதிகரித்தால் மாசு படிப்படியாகக் குறையும்.

கேள்வி – இனி வரும் ஆண்டுகளில், இதுபோன்ற திடீர் மாசுபாடு பெருக்கத்தை குறைக்க அரசு என்ன செய்ய வேண்டும்?

பதில் –இந்த முயற்சி தனி முயற்சி அல்ல. அரசம், தனி மனிதர்களும் இணைந்து இந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதனால் மாசுபாடு அதிகரித்து வருகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி மாசுபாட்டை குறைக்க முயல வேண்டும்.

டெல்லியை சுற்றியிருக்கும் மாநிலங்களில் அறுவடை முடிந்த பின்னர் பதரை அங்கேயே போட்டு கொழுத்திவிடுவது, டெல்லியில் புகைமூட்டம் ஏற்பட காரணமாகிவிடுகிறது. பதரை அதனை எரித்து விடாமல் உழுதும் நிலத்திற்கு எருவாக்க முடியும். அதற்கான சரியான விழிப்புணர்வும், சுயக்கட்டுபாடும் சொல்லி கொடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதரும் துப்புரவாக இருக்க கற்றுக்கொள்வது, மாசுபாட்டை குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

மேலும், கழிவு மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது. சரியான கழிவு மேலாண்மை இல்லை என்றால், நம்முடைய நகரங்களுக்கு அருகில், குப்பைமேடுகள் உருவாவதை தடுக்க முடியாது. எனவே, செயல்திறன்மிக்க கழிவு மேலாண்மை மக்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுவதோடு, அரசும் சிறந்த சிரத்தை மேற்கொள்ள வேண்டும்.

-BBC_Tamil

 

TAGS: