வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்?திருமாவளவன்

வேல்முருகன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக! என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:  ’’தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது. இந்நிலையில் அவர்மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட புதிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். வேல்முருகன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் முனைப்போடு இருப்பவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவர்களை முடக்கிவிடலாம் எனத் தமிழக அரசு எண்ணுகிறது. அதுவும் கூட மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவே தமிழக அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது. காவிரி பிரச்சனையில் முதலமைச்சர் உட்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்காக வாதாடிய வழக்கறிஞர் நபாதேவும் ’மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது’ என்று குற்றம்சாட்டிய நிலையில் காவிரி பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்துப் பேசினார் என்பதற்காக வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்?

தமிழக அரசு இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயகப் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.’’

-nakkheeran.in

TAGS: