தாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே? விசாரணையில் காவல்துறை!

தாட்டி மகாராஜின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 600 பெண்களைக் காணவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

சர்ச்சைக்குரிய சாமியாரான தாட்டி மகாராஜ் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீடராக இருந்துவந்த 25 வயது இளம்பெண், தாட்டி மகாராஜ் மற்றும் அவரது சீடர்கள் தன்னை ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆசிரமங்களில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லி காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இதற்கு ஒரு பெண் சீடர் உடந்தையாக இருந்ததாகவும், தொடர்ந்து மிரட்டலுக்கு உள்ளாக்கி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தான் மனஅழுத்தத்தில் இருந்து தற்போது மீண்டு வந்திருப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன்னை பாலியல் வன்புணர்வு செய்த அறையை அந்தப் பெண் அடையாளம் காட்ட, காவல்நிலையில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் ஆலவாஸ் பகுதியில் உள்ள தாட்டி மகாராஜின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்களைக் காணவில்லை என்ற புதிய குழப்பம் கிளம்பியுள்ளது. முன்னதாக, தாட்டி மகாராஜ் தனது ஆசிரமத்தில் 700 பெண்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, எண்ணிக்கை திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

-nakkheeran.in

 

TAGS: