வெளிநாடுகளில் தமிழக பாரம்பரியமிக்க 20 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

சென்னை, தமிழக சட்டசபையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலளித்து பேசியதாவது:-

தமிழகத்தில் கண்டறியப்பட்ட 1,250 அரும் கலைப் பொருள்களை முறைப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 35 அருங்காட்சியகங்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 943 அரும்பொருள்கள் உள்ளன.

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மட்டும் 75 ஆயிரத்துக்கும் அதிகமாக காட்சிப் பொருட்கள் உள்ளன. அருங்காட்சியகங்களில் உள்ள பொருள்களின் மதிப்பு உலகச் சந்தையில் பல லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

எனவே இந்தப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்டில், தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. (அமைச்சர் க.பாண்டியராஜன் குறிப்பிட்ட ஆட்சி காலம் தொடர்பான கருத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். எனவே அந்த கருத்தை அமைச்சர் திரும்பப் பெற்றுக்கொண்டார்).

பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 20 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.250 கோடி மதிப்புக்கும் அதிகமான ராஜ ராஜன், லோகமாதாதேவி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை மீட்டுக் கொண்டு வரும் முயற்சிகள் எடுத்து வரப்படுகின்றன. சிலைகளை கடத்திய சுபாஷ்கபூர் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பிடிபட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் க.பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

உலக நாட்டிய தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் செவ்வியல், நாட்டுபுற நடனக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.உலக இசை தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகளில் மற்றும் இசைப்போட்டிகள் நடத்துதல் மற்றும் படையாற்றல் மிக்க இசை நகரமாக சென்னையை யுனெஸ்கோ அறிவித்ததை முன்னிட்டு சென்னையில் இசை விழா நடத்தப்படும்.

சென்னைஅருங்காட்சியகத்தில் வளர்கலைக் கூடத்தின் தரைத் தளத்தில் நிரந்தர கண்காட்சிக் கூடம் அமைக்கப்படும்.சென்னை அரசு அருங்காட்சியக மானிடவியல் பிரிவில் இசைக் கருவிகளுக்கான தனித்த காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் பயன்பெற காணொளி கேட்டொலியுடன் கூடிய செயலி உருவாக்கப்படும்.

தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய மாவட்ட அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அகழ்வைப்பகங்களில் காவல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் 50 பணியாளர்களுக்கு நிலை ஊதியம் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

தொல்லியல் துறையின் கீழ் உள்ள 14 அகழ்வைப்பகங்களை மேம்படுத்தி, பராமரித்து சிறப்பு நூலகம் அமைக்கப்படும்.

கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

-dailythanthi.com

TAGS: