சிறுமியரை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சிறுமியருக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு, மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின், மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது: “ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கத்துவா, உ.பி.,யில் உள்ள உன்னாவ் ஆகிய இடங்களில், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பல்வேறு கொடுமைகளில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும், ‘போக்ஸோ’ சட்டத்தில் கடும் தண்டனைகள் சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் அவசர சட்டம், ஏப்ரல்,21இல் அமலுக்கு வந்தது.

மேலும், சிறுமியரை பாதுகாக்க, தண்டனையை மேலும் கடுமையாக்கி நிரந்தர சட்டம் ஒன்றை சட்ட அமைச்சகம் தயாரித்தது. நிரந்தர சட்ட மசோதாவுக்கு, பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய சட்ட மசோதா, தற்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இரு சபைகளின் ஒப்புதல் கிடைத்ததும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், அந்த வழக்கு, இரண்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்கப்படும். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அதேசமயம், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்பவருக்கு முன்ஜாமின் அளிக்கப்பட மாட்டாது.

வழக்கின் தண்மைக்கேற்ப, குறைந்தபட்சம், 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். பாலியல் பலாத்கார குற்றத்துக்கான குறைந்த பட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: