40 சிறுமிகள் பலாத்காரம்..தட்டி கேட்ட பெண்ணை கொன்று புதைத்த கொடூரம்.. காப்பக ஓனர் உள்பட 10 பேர் கைது

முசாஃபர்பூர்: பீகாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஒரு பெண்ணை கொன்று காப்பக வளாகத்தில் புதைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதையடுத்து காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் 7 வயது முதல் 17 வயது வரையிலான உங்கள் சகோதரிகள், பிள்ளைகள் என காப்பகத்துக்கு நன்கொடை அளிப்பவர்களால் பல மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைத்து பாருங்கள்.

பதவிதான் முக்கியம்

பீகாரில் ஏராளமான பலாத்கார சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்கு அரசு நடவடிக்கை ஏதும் அளிக்காமல் மவுனம் காக்கிறது. அவர்களுக்கு பதவிதான் முக்கியம் என்று டுவிட்டரில் கூறியிருந்தார்.

நடவடிக்கை இல்லை

மேலும் இந்த விவகாரத்தில் காப்பகத்தை நடத்தும் என்ஜிஓவின் உரிமையாளர் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் தேஜஸ்வி தெரிவித்தார்.

40-க்கும் மேற்பட்ட சிறுமிகள்

இந்நிலையில் இந்த விவகாரம் மாநிலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இதையடுத்து காப்பகத்தில் ஆய்வு நடத்திய மும்பை நிறுவனம்தான் இந்த பலாத்கார சம்பவங்களை வெளியே கொண்டு வந்தன. இதையடுத்து காப்பகத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடுக் தகவல்களை கூறினார். அதில் இதுவரை இந்த காப்பகத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிப்பு

மேலும் பலாத்காரத்தை தட்டி கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து இதே வளாகத்தில் புதைத்தும் உள்ளனர் என திடுக் தகவலை தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேசிபி வரவழைத்து காப்பக வளாகத்தை தோண்டி வருகின்றனர். மேலும் காப்பகத்தின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது.

காப்பக உரிமையாளர்

இந்த புகார் தொடர்பாக நிதிஷ்குமார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காப்பக உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீஸார் தேடி வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: