சென்னையில் மின்சார ரெயிலில் இருந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான்.

புறநகர் மக்களை சென்னை நகரோடு இணைக்கும் பாலமாக இருக்கும் மின்சார ரெயில்கள் சென்னை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம்.

அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயக்கப்படும் சென்னை மின்சார ரெயில்களை நம்பிதான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் போதுமான அளவுக்கு ரெயில் சேவைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் கொடூரம் நடக்கிறது.

நேற்று இரவு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்துக்கும் 3-வது பிளாட்பாரத்துக்கும் இடை யில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். கூட்ட நெரிசலில் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி பயணம் செய்த அவர்களுக்கு சிமெண்ட் தடுப்பு சுவர் எமனாக மாறியது.

சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்தனர். இந்த நிலையில் இன்று காலை அதே இடத்தில், அதே சுவரில் மோதி 5 பேர் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரெயில் சேவை தொடங்கி நடந்தபடி இருந்தது. காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்தனர். இந்த பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. இதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.

மின்சார ரெயிலை எதிர்பார்த்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து கொண்டே நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரெயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால் பயணிகள் அனைவரும் கிடைத்த ரெயில்களில் முண்டியடித்தபடி ஏறி சென்றனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும் விரைவு ரெயில் கடற்கரையில் வழக்கமாக காலை 7.05 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலை மின்வயர் அறுந்து விழுந்து தடை ஏற்பட்டதால் அந்த ரெயில் 7.40 மணிக்கு தான் புறப்பட்டது.

தாமதம் மற்றும் அதிக விரைவு ரெயில் சேவை இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் அந்த ரெயிலில் ஏறினார்கள். இதனால் அந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரைக்கு பிறகு கோட்டை, பார்க், எழும்பூர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய 9 ரெயில் நிலையங்களிலும் ஏராளமானவர்கள் அந்த விரைவு ரெயிலில் ஏறினார்கள். இதனால் நிறைய பயணிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டி வாசலிலும் தொங்கி கொண்டே பயணம் செய்ய நேரிட்டது.

காலை 8.25 மணிக்கு அந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் வந்தது. தாமதம் காரணமாக அந்த ரெயில் சற்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த ரெயில் வழக்கமான பிளாட்பாரத்துக்குள் செல்லாமல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் 4-வது பிளாட்பாரத்திற்கு திருப்பி விடப்பட்டு இருந்தது. இதுதான் இன்று காலை நடந்த பரிதாப விபத்துக்கு காரணமாகி விட்டது.

4-வது பிளாட்பாரத்திற்கும், 3-வது பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த சிமெண்ட் தடுப்பு சுவரை ரெயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை. ரெயில் பிளாட்பாரத்தில் நுழைந்ததும் தொங்கிக் கொண்டு இருந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சிமெண்ட் தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டது.

இதனால் அந்த பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்தார். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

9 பயணிகள் கீழே விழுந்த தகவல் அறிந்ததும் டிரைவர் ரெயிலை அங்கேயே நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கினார்கள். ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரெயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் வேனுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது நவீன்குமார் என்ற பயணி இறந்தார். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்போது மற்றொரு பயணி உயிர் இழந்தார்.

இதனால் ரெயிலில் இருந்து கீழே விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முதலில் பலியானவர்கள் விவரம் தெரியாமல் இருந்தது. பிறகு அவர்களது உடமைகளை ஆய்வு செய்து அவர்கள் யார் என்று கண்டுபிடித்தனர்.

பலியானவர்களில் ஒருவர் சிவக்குமார். இவர் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரில் படித்து வந்தார். இன்று காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.

மற்றொருவர் பரத் என்று தெரிய வந்துள்ளது. இவர் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மற்றவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே காயம் அடைந்த 4 பேரில் 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பயணிக்கு 2 கால்களும் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவருக்கு கை நசுங்கி உள்ளது.

அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை பெற்று வரும் இந்த 4 பேரின் விவரங்களை ரெயில்வே போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

5 பேரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பீஜேந்திரசிங், அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங்சாய் ஆகியோர் பரங்கிமலைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்து நடந்த சிமெண்ட் தடுப்பு சுவர் பகுதியையும் பார்வையிட்டனர்.

நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 7 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

-eelamnews.co.uk

TAGS: