நேதாஜி இறந்தது உண்மையா? பதில் அளிக்க உத்தரவு

புதுடில்லி: சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இளைஞர்கள் பலருக்கும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ பயிற்சி அளித்தவர், சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயருக்கு எதிரான இவரது வீரம், தலைமை பண்பு ஆகியவற்றால், ‘நேதாஜி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

நேதாஜி வெளிநாட்டிற்கு சென்றபோது, மர்மமான முறையில், விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.இவரது மரணம் குறித்த ஆவணங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. எனினும், இதில் தனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான தகவல்கள் இடம் பெறவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர், அவ்தேஷ் குமார் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என, அவர், தன் மனுவில் கேட்டுள்ளார். நேதாஜி மரணம் குறித்த ரகசியங்கள் வெளியிடப்பட்டு, அது குறித்த ஆவணங்கள், மத்திய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சதுர்வேதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்கும்படி, மத்திய ஆவண காப்பகத்திற்கு, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

-dinamalar.com

TAGS: