இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல் – திரும்பும் வரலாறு

பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உயர்நிலை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிற மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசு பள்ளிகளில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை நினைவு கொள்ள வேண்டும்.

இது இரு நூற்றாண்டுக் கதை. 1833ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி கிறித்தவ மிஷினரிகளின் செயல்பாட்டை கட்டுபடுத்த தவறியது. கிறித்தவத்தை பரப்புவதற்கான மிஷினரிகள் படையெடுத்தன, குறிப்பாக தென் இந்தியாவை இலக்கு வைத்தன.

தென் இந்தியாவில் மிஷினரிகள் அதிகம் கால்பதித்தன என்பதை இரு மேற்கொள்கள் மூலம் கூறலாம்.

“1832ஆண்டுக்குள் 40,000க்கும் மேற்பட்ட கிறித்தவ துண்டுப்பிரசுரங்கள் தமிழில் அச்சிடப்பட்டன. அவை 1852ஆம் ஆண்டிற்குள் 2,10,000 ஆகின.” (எம்.எஸ்.எஸ் பாண்டியனின் பிராமின் & நான் பிராமின், புத்தகம்)

“1852ஆம் ஆண்டில், மெட்ராஸில் 1185 மிஷனரி பள்ளிகளில் 38,000 மாணவர்கள் இருந்தனர். ஆனால் பாம்பே மற்றும் வங்காள பரசிடென்சியை சேர்த்து 472 பள்ளிகள் இருந்தன அதில் 18,000 மாணவர்கள் பயின்றனர்.” (எஸ்.நாரயணின் தி ட்ரவிடியன் ஸ்டோரி புத்தகம் )

இவை அனைத்தும் கிறித்தவ மதம் குறித்த செய்திகளை பரப்புவதற்கு மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

இந்து மதக் கடவுள்களையும், நம்பிக்கைகளையும் இழிவு படுத்துவதன் மூலம் இந்துக்கள் மதம் மாறுவதற்கு தெரிவிக்கும் எதிர்ப்பதை குறைக்கலாம் எனவும் கருதப்பட்டது.

வேதங்கள், புராணங்கள், மற்றும் சங்கர அத்வைத தத்துவம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற பிராமணர்கள், ஐரோப்பிய மற்றும் பிரிட்டனின் கலாசாரத்தை தெரிந்தவர்கள் இதை எதிர்க்க முற்பட்டனர்.

சமஸ்கிரத மொழியில் உள்ள “ஆரியர்கள்” என்ற பதத்துடன் தங்களின் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளும் பிராமணர்கள், “பாரம்பரியம்” என்ற பெயரில் அவர்களின் “பழமையான சாதி அதிகாரங்களை” நடைமுறைப்படுத்தினர். மேலும் ஆங்கிலத்தில் உள்ள புலமையின் காரணமாக “காலனித்துவ நிறுவன அமைப்பின் அதிகாரத்தை நவீனமாக செயல்படுத்தினர்.” (எம்.எஸ்.எஸ் பாண்டியன்).

தமிழ்

காலனித்துவ நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை விளக்குகிறார் எழுத்தாளர் நாராயண்: “1892ஆம் ஆண்டிலிருந்து 1904ஆம் ஆண்டிற்குள் இந்திய சிவில் சேவையில் தேர்வாகிய 16 பேரில் 15 பேர் பிராமணர்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட 27 பொறியாளர்களில் 21 பேர் பிராமணர்கள்.”

ஆரிய பரம்பரை மற்றும் சமஸ்கிரத கலாசாரம் ஆகியவற்றை கொண்ட பிரமணர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்கள், அந்த சமயத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெறுபவர்களில் 67 சதவிகிதம் பேர் பிராமணர்களாக இருந்தனர்.

அரசு பணிகள், தலைமைச் செயலகம் மற்றும் பிற மாவட்ட நிர்வாகத்திலும் அவர்கள்தாம் அதிகம் இருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் ஆகியவையும் கிட்டதட்ட அவர்கள் கட்டுபாட்டிலேயே இருந்தன. பிரபலமான பத்திரிகையாளர்கள் பிராமணர்கள்; ஏன் தனியார் வர்த்தகங்களிலும் அவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்தினர்.

இதற்கான எதிர்ப்பு சீக்கிரமே வந்தது. 1916ஆம் ஆண்டு டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறி “பார்பனர் அல்லாதார் கொள்கை பிரகடனம்” ஒன்றை வெளியிட்டனர்.

இந்தி திணிப்பு

1916ஆம் ஆண்டு, மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். தமிழில் உள்ள சமஸ்கிரத கலப்பு மற்றும் தமிழ் சொற்கள் அல்லாத சொற்களை நீக்குவதற்காக அந்த அமைப்பை தொடங்கினார். இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சியாக உருவெடுத்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸியில் இருந்த பிராமணர்களை அதிகமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வலுவான ஒரு சவாலை கொடுக்க தொடங்கியது.

மகாத்மா காந்தியின் பரிந்துரையால் 1918ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தி பிரசார சபா, தமிழின அடையாளம் குறித்து அரசியல் மொழி தொடர்பாக ஏற்பட்டிருந்த எதிர்ப்பானதை மேலும் வளர்த்தது. ஒருகாலத்தில் காங்கிரஸ், பிராமணர்கள், ஆரியர்கள், வட இந்தியர்கள், சமஸ்கிரதம் மற்றும் இந்தி திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக இருந்து வந்த நிலை திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு வித்திட்டது.

சமூக, மொழி கலாசாரத்துக்கான எதிர்ப்புரட்சி உச்சத்தை அடைந்தபோது 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

தமிழ்

நீதிக்கட்சி தேர்தல்களில் தடுமாறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம் அதனை பின்னுக்கு தள்ளியது. அதன்பின் 1938ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவரானார் பெரியார். அதனை திராவிட கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்தார்.

மெட்ராஸ் மாகாணாத்தின் முதலமைச்சராக இருந்த காந்தியவாத பிராமணராகிய ராஜாஜி, 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி சுதேசமித்ரன் பத்திரிகையில், “இந்தி கற்றுக் கொண்டால் மட்டுமே தென் இந்தியர்கள் பிற மக்களின் மத்தியில் மதிப்பை பெற முடியும்,” என எழுதினார். இதனை அரசு ஆணையாகவும் அவர் பிறப்பித்தார். அதன்பின் இடைநிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார்.

இதுவே தமிழர்கள் மத்தியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நடைபெற்றது. அதுவே தமிழ்நாட்டு அரசியலின் வரைபடத்தையும் மாற்றியது என்று கூறலாம்.

பெரியார்

இந்த அரசாணைக்கு எதிராக நீதிக்கட்சி மற்றும் முஸ்லிம் லீக்கால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் படை 42 நாள் பேரணியை தொடங்கியது. அது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. திருச்சியிலிருந்து மெட்ராஸ் வரை நடைபெற்ற அந்த பேரணி 239 கிராமங்கள் மற்றும் 60 நகரங்களில் சென்றது. அந்த பெரிய பேரணியில் 50,000 பேர் கலந்து கொண்டனர்.

“தமிழர்கள் கண்ணீர் சிந்தும்போது ஆரியர்கள் சிரிக்கின்றனர்.” மற்றும் “பிராமண சமூகம் தமிழ்த்தாயை கொல்கிறது” என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்தி எதிர்ப்பு மாநாடுகள் அந்நாட்களில் இயல்பான நிகழ்வுகளாக இருந்தன. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு படை உருவானது. பெண்கள் நடத்திய மாநாட்டில் ஈ.வெ.ராமாசாமிக்கு ‘பெரியார்’ என பட்டம் வழங்கப்பட்டது. அந்த பெயராலேயே அவர் பெரிதும் அழைக்கப்பட்டார்.

தமிழர்களுக்கே தமிழ்நாடு என்னும் வார்த்தையை உருவாக்கி தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.

அமெரிக்க வாழ் இந்திய எழுத்தாளரான சுமதி ராமசாமி, “இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பலதரப்பட்ட சமூக அரசியல் கொள்கைகளை ஒன்றிணைத்தது. மத சீர்த்திருத்தவாதிகள் மற்றும் கடவுள் மறுப்பாளர்களை ஒன்று சேர்த்தது. இந்தியாவை ஆதிரிப்பவர்கள் திராவிட இயத்தை ஆதரித்தார்கள். பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாத கவிஞர்கள், மக்களுக்கான துண்டு பிரசுரம் வழங்குபவர்கள் மற்றும் கல்லூரி மாணர்வர்களை அது இணைத்தது.” என்றார்.

முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவரான பி.கலிஃபுல்லா, “நான் ராவுத்தராக இருந்தாலும், என்னுடைய தாய் மொழி தமிழ்தான் உருது அல்ல. அதில் எனக்கு எந்தவித அவமானமும் இல்லை. நான் பெருமைப்படுகிறேன்,” என்றார்.

அண்ணாவும் பெரியாரும்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் கூட இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினர். ஆனால் ராஜாஜி விடாப்பிடியாக இருந்தார்.

அதன்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் கருத்தை கேட்காமல் அவர்களின் போரில் இந்தியர்களை ஈடுபட வைக்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களும் பதவி விலகியபோது, அவர்களுடன் சேர்ந்து ராஜாஜியும் தனது பதவியை 1939ஆம் ஆண்டு பதவி விலகினார். அதன்பின் மெட்ராஸின் ஆளுநராக இருந்த எர்க்ஸ்கின் அந்த அரசாணையை திரும்பப்பெற்றார்.

அதன்பின் அவர், “இந்த மாகாணத்தில் கட்டாய இந்தி ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது நிச்சயமாக பெருமளவிலான மக்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது,” என்று வைஸ்ராயிடம் தெரிவித்தார்.

இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால் அந்த முடிவை 15 வருடங்களுக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதாவது 1965ஆம் ஆண்டிற்கு. அந்த காலம் வந்தபோது, திமுக பொது செயலராக இருந்த சி.என்.அண்ணாதுரை, “இந்தியை திணிப்பவர்களுக்கு எதிராக போர்த் தொடுப்பது தமிழ் மக்களின் கடமை,” என தெரிவித்தார்.

அதன்பின் இரண்டு மத்திய அமைச்சர்கள் (அழகேசன், சி.சுப்பிரமணியம்) பதவி விலகிய பின்பும் கூட காங்கிரஸ் முதலைமைச்சர் பக்தவச்சலம் மத்தியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி அரசுடன் இணைந்து தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை கொண்டுவந்தனர். அது பல கலவரங்களுக்கும், பலர் தங்களை மாய்த்துக் கொள்ளவும் வித்திட்டது.

1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்தல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழக்க காரணமாக அமைந்தது

அதன்பின் இந்திரா காந்தி தலையிட்டு ஆட்சி மொழி சட்டத்தை 1968ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அதனால் அடுத்த அரை நூற்றாண்டுக்கு இந்த போராட்டம் தணிந்தது என்றே சொல்லலாம்.

தற்போது மு.க. ஸ்டாலின் சொன்னதுபோல் கஸ்தூரி ரங்கன் கமிட்டி “தேன் கூட்டின் மேல் கல்லெறிந்துள்ளது.” இந்தி இந்துத்துவா மீண்டும் எழுந்தால் 1937-40 மற்றும் 1965 ஆண்டு நடந்த போராட்டங்கள் மீண்டு உயிர்பெரும். இது இந்திய நாட்டிற்கு ஓர் எச்சரிக்கையாகும்.

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்.)

-BBC_Tamil

TAGS: