ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு வருகிறது ஆப்பு; அரசு திட்டம்!

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்து வருமாறு அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது வாழ்க்கையில் இருந்தும், அரசுப்பணிகளில் இருந்தும் ஊழலை ஒழிக்கும் திட்டம், மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டது. ஊழலை சிறிதும் சகித்துக் கொள்ளாத கொள்கை பின்பற்றப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.

அதற்கு உதாரணமாக, சமீபத்தில் இந்திய வருவாய்ப்பணி (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரிகள் 15 பேரை மத்திய அரசு கட்டாய ஓய்வு மூலம் பணிநீக்கம் செய்தது. இம்மாத தொடக்கத்தில், 12 வருவாய்ப்பணி அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது.

இதன் தொடர்ச்சியாக, ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை மட்டுமின்றி, செயல்திறன் இல்லாத ஊழியர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு மத்திய அரசு, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணி பதிவேடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அடிப்படை விதிகள் கூறுகின்றன.

ஒருவரின் நேர்மை சந்தேகத்துக்குரியதாகவோ, செயல்பாடுகள் திறமைக்குறைவாகவோ இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை பொதுநலன் கருதி, கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசுக்கு இந்த விதிகள் அனுமதி அளிக்கின்றன.

ஆகவே, இந்த பதிவேடுகளை ஆய்வு செய்து, மாதந்தோறும் 15-ந் தேதிக்குள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

பொதுநலன் கருதி, ஒரு ஊழியரை கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான பரிந்துரைகளை செய்வதில் உரிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: