“மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள் தற்கொலை”

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். தற்போது அங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், ” கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.

தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 விவசாயிகளில் 6,888 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதில் 6,845 விவசாயிகளுக்கு இழப்பீடாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் 3 மாதங்களில் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதில் 192 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 96 பேர் விவசாயிகள் இல்லை. மீதமுள்ள 323 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது,” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-இந்து தமிழ்

TAGS: