ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு

ஏர் இந்தியா

ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

புதுடெல்லி: நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இயங்கிய நிறுவனத்தை வாங்க பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டின. டாடா உள்ளிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தன. அதில் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது.

ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. இத்தகவலை முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.

ஏர் இந்தியாவை மீண்டும் பெற்றிருப்பதில் டாடா குழுமம் மகிழ்ச்சி அடைவதாக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். உலகத் தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவதற்காக, அனைவருடனும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.