தமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்

-ஜீவி காத்தையா

இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டுகள் பூர்த்தியாகும்.

இந்த இரு நூறு ஆண்டுகளை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கையில், நம்மை வரவேற்க காத்துக்கொண்டிருப்பது தமிழ்ப்பள்ளிகளின் சவக்குழி!

வேண்டுமானால், அந்த நாள் தள்ளிப்போடப்படலாம். அம்னோ மலாய்க்காரர்கள் சீன மற்றும் இந்தியர்களின் வாக்குகள் தேவை இல்லாமல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நாள் வரும் வரையில் அந்த நாள் தள்ளிப்போடப்படலாம். 17.09.2010 இல் கூட, தேசிய ஒற்றுமை ஓங்க வேண்டுமென்றால் தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்ட வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமைக்கு இடையூறாக இருப்பது கிட்டத்தட்ட இரு நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் தாய்மொழிப்பள்ளிகளோ அவற்றின் ஆசிரியர்களோ அல்லர். தேசிய ஒற்றுமையைப் பிளப்பது இன வாதம். அதற்கு வித்திட்டது அம்னோ.

சீனர்கள் எண்ணிக்கையில் மலாய்க்காரர்களைவிட கூடிவிடாமல் இருக்க வேண்டுமானால், அதிகமாக இந்தோனேசியர்கள் இங்கு வருவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தோனேசியர்கள் நமது உடன்பிறந்த  சகோதரர்கள் என்று வரலாறு கூறுகிறது என்று கூறியவர் அம்னோவின் முதல் தலைவர் ஓன் பின் ஜாபார்.

அவர் கூறியது இன்று நடந்து கொண்டிருக்கிறதா இல்லையா?

அடுத்த அம்னோ தலைவரும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் சிரித்தே காரியம் சாதித்தவர். இங்கு எல்லாருக்கும் இடம் உண்டு கூறிய அதே வேளையில் மலாயா மலாய்க்காரர்களுக்கே என்றார்.

விருந்தாளிகள் (சீனர்களும் இந்தியர்களும்) விருந்து முடிந்ததும் திரும்பிப் போகவேண்டும் என்றவர் மகாதிர்.

நஜிப் ரசாக் அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக இருந்தபோது அப்பிரிவினர் கோலாலம்பூர் சுல்தான் சுலைமான் அரங்கில் நடத்திய பேரணியில் “இதை (கிரிஸ் கத்தியை) சீனர்களின் இரத்ததில் தோய்க்க வேண்டும்” என்ற பாதாகையை ஏந்தியிருந்தனர்.

இன்றும், இந்தியர்களைப் பிச்சை எடுக்க வந்தவர்கள் என்பதும் சீனப் பெண்கள் தங்களுடைய உடல்களை விற்க வந்தவர்கள் என்றும் திரும்பிப் போங்கள் என்றும் கூறுவது யார்? அம்னோக்காரர்கள்தான், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அல்லர்.

நாட்டில் இனவாதத்தை வித்திட்டு வளர்க்கும் இடம் கல்வி அமைச்சும் பிரதமர்துறையும்தான். இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்களை வைத்து பல மில்லியன் ரிங்கிட்களைச் செலவிட்டு பிடிஎன் பயிற்சிகளின் வழி இனவாதத்தைப் பரப்புவது பிரதமர்துறை. அதன் பயிற்சி திட்டங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்கிறார் மகாதீர்.

தேசியப்பள்ளிகள் இப்போது ஓர் இனத்திற்கும் ஒரு மதத்திற்குமான பள்ளிகளாகிவிட்டன என்று கூறியவர் யார்? மகாதிர்.

தேசியப்பள்ளி தனது குழந்தையை மலேசியனாக உருவாக்காது என்று கூறி மரீனா மகாதிர் அவருடைய குழந்தையைத் தேசியப்பள்ளியிலிருந்து மீட்டுக்கொண்டார்.

இனவாத நஞ்சைக் கக்கியே ஆட்சியில் அமர்ந்திருக்கும் அம்னோக்காரர்கள் தேசிய ஒற்றுமையை வளர்க்க தாய்மொழிப்பள்ளிகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள். இதன் வழி அம்னோக்காரர்கள் அவர்களின் ஒரே இன, ஒரே மொழி, ஒரே மலேசியாவை உருவாக்குவார்கள்.

*வலிப்பு வரும்போது வழக்கம்போல் பலர் குதிக்கலாம். “உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு” என்று முழங்கலாம்.

ஆனால், இனவாதிகளான அம்னோக்காரர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். மலாய் தேசியவாதிகளால் தூண்டப்பட்டு 1950களில் உருவாக்கப்பட்ட “இறுதிக் குறிக்கோள்” (Ultimate objective) என்ற கல்விக் கொள்கையை அவர்கள் இன்று வரையில் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் முதலாவது கல்வி அமைச்சரான அப்துல் ரசாக்கிலிருந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற முகைதின் யாசின் வரையில் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதில் ஓரிருவர் தேர்தல் நோக்கத்திற்காக மக்களை, குறிப்பாக சீனர்களை, ஏமாற்றும் எண்ணத்துடன் “இறுதிக் குறிக்கோள்” வழக்கற்றுப்போன கொள்கை என்றெல்லாம் கூறியுள்ளனர்.

மார்ச் 7, 2007 ஆண்டு, அன்றையக் கல்வி அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் சின் சியு நாளிதழ் அலுவலகத்திற்குத் தானாகவே சென்று “ரசாக்” அறிக்கையில் கூறப்பட்டுள்ள “இறுதிக் குறிக்கோள்” என்ற கொள்கை “வழக்கற்றுப்போன” கொள்கை என்றும் சீனர்கள் அக்கொள்கை குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஹிசாமுடின் தமிழ்ப்பள்ளிகள் மீதான இறுதிக் குறிக்கோளின் தாக்கம் குறித்து எதுவும் கூறவில்லை. அவரது கவனமெல்லாம் சீன வாக்காளர்கள்தான்.

சற்று கவனியுங்கள்: மார்ச் 2007 ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த ஹிசாமுடின் இறுதிக் குறிக்கோள் வழக்கற்றுபோனது என்றார். ஏப்ரல் 2008 இல் கல்வி அமைச்சரான முகைதின் யாசின் இறுதிக் குறிக்கோள் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது என்று கூறினார்.

மார்ச் 8, 2008 இல் வாங்கிய அடியால் இன்னும் திணறிக்கொண்டிருக்கும் அம்னோ தலைவர் நஜிப் ரசாக், முகைதின் யாசின் விடுத்த அறிக்கையால் ஏற்படப்போகும் பாதிப்பைச் சரிக்கட்டும் நோக்கத்தில் அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்டால்தான் இறுதிக் குறிக்கோள் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பூசிமெழுகுவதில் வல்லவராகி வருவதாக எண்ணிக்கொண்டிருக்கும் அவர் கூறினார்.

ஆனால், இதே நஜிப் ரசாக், மார்ச் 6, 2008 இல் கோலாலம்பூரில் நடந்த மஇகா கூட்டத்தில் தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் வேறுபாடு இருக்காது என்று உறுதி கூறினார்!

இவர்களுக்கு முன்பு கல்வி அமைச்சராக இருந்த மூசா முகமட் அக்டோபர் 1, 2000 இல் தாய்மொழிப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட சமூகங்களின் பொறுப்பு என்று அப்பட்டமாக கூறியுள்ளார்.

அதே அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “ நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம். அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?”, என்று கேட்டுள்ளார்.

அடுத்து, இடத்தைத் தேடிக்கொண்டவர்கள், அதில் பள்ளிக்கான கட்டடம் கட்டிக்கொள்ள முடியாதா?, பள்ளிக்கூடம் கட்டியவர்கள் ஆசிரியர்களை அமர்த்த முடியாதா?, ஆசிரியர்களை அமர்த்தியவர்கள் அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாதா? என்றெல்லாம் முகைதின் நிச்சயம் கேட்பார். ஏனென்றால், இப்படியும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடையலாம்.

60 சுயேட்சை சீனமொழி இடைநிலைப்பள்ளிகளைப் பராமரிப்பதற்குச் செல்வந்தர்களான சீனர்களே திணறும்போது, இந்தியர்கள் என்ன செய்ய முடியும் என்பதை முகைதின் அறிவார்.

தேசியப்பள்ளிகளை மலாய் இனத்தவர்கள் பராமரிக்கவில்லை. அதனைச் செய்வது அரசாங்கம். ஏனென்றால், இன்றையச் சூழ்நிலையில் எந்த ஒரு சமூகமும் தன் சுய பலத்தில் அதன் மொழிப்பள்ளிகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பது அம்னோக்காரர்கள் அறியாதல்ல.

மக்களின் வரிப்பணத்தில் ஒரு மொழிப்பள்ளிக்கு அனைத்தையும் வழங்கும் அரசாங்கம் மற்ற மொழிப்பள்ளிகளுக்கு அதனை மறுக்கிறது. அதுதான் அரசாங்கத்தின் அப்பட்டமான கல்விக் கொள்கை.

அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் கைவைத்தால், தாய்மொழிப்பள்ளிகள் தானாகவே மடியும், அரசாங்கம் அவற்றை அதிகாரப்பூர்வமாக மூட வேண்டியதில்லை என்ற வியூக அடிப்படையில் அம்னோ அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

அதன் தாக்கம்தான் மஇகா கிளைகள் அவை இயங்கும் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுக்க வேண்டும் என்று மஇகா தலைவர் விடுத்துள்ள கோரிக்கை.

மலேசிய குடிமக்களுக்குக் கல்வி போதிக்கும் தமிழ்ப்பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டால், எவ்வளவு நாள்களுக்கு அப்பள்ளிகள் தாக்குப் பிடிக்கும்?

இறுதிக் குறிக்கோள்

1950களில் மலாய் இனவாதிகளை அதிகமாகக் கொண்டிருந்த பார்ன்ஸ் குழு நாட்டில் ஆங்கிலம் மற்றும் மலாய்மொழிகளைப்  போதனை மொழியாக கொண்ட தேசிய பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சீன மற்றும் தமிழ் மொழிகளைப் போதனா மொழியாக கொண்ட தாய்மொழிப்பள்ளிகள் கட்டங்கட்டமாக அகற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.

இப்பரிந்துரையை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நாட்டுப்பற்று கேள்விக்குரியதாகும் என்றும் அக்குழு கூறியிருந்தது.

அக்குழு செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் ரசாக் அறிக்கை (Razak Report) தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசியப்பள்ளியோடு தாய்மொழிப்பள்ளிகளும் தொடரும் என்ற உடன்படிக்கை உருவாயிற்று. ஆனால், இறுதிக் குறிக்கோள் கைவிடப்பட்டதாக இன்று வரையில் அறிவிக்கப்படவில்லை.

கல்வி அமைச்சர் அப்துல் ரசாக்கை தொடர்ந்து இன்று வரையில் ஒவ்வொரு கல்வி அமைச்சரும், அன்வார் இப்ராகிம் உட்பட, தாய்மொழிக் கல்விக்குச் சாவு மணி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சாவு மணி அடிக்கும் கொள்கையைப் பகிரங்கமாக அறிவித்தால், தங்கள்டைய பதவிக்கும் அதே மணி அடிக்கப்படலாம் என்பதை உணர்ந்துள்ள அம்னோக்காரர்கள் தாய்மொழிப்பள்ளிகளுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை இறுக்கிப்பிடிப்பதன் மூலம் தங்களுடைய இறுதிக் குறிக்கோள் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்கம் செய்து வருகின்றனர்.

இதனைச் சற்று கவனிக்க வேண்டும். மலாய், சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள்:

6 ஆவது திட்டம் (1991-1995)-மலாய் பள்ளி 89.72%; சீனப்பள்ளி 8.14%; தமிழ்ப்பள்ளி 2.14%.

7 ஆவது திட்டம் (1996-2000)-மலாய் பள்ளி 96.54%; சீனப்பள்ளி 2.44%; தமிழ்ப்பள்ளி 1.02%.

8 ஆவது திட்டம் (2001-2005)-மலாய் பள்ளி 96.10%; சீனப்பள்ளி 2.73%; தமிழ்ப்பள்ளி 1.17%.

9 ஆவது திட்டம் (2006-2010)-மலாய்ப்பள்ளி 95.06%; சீனப்பள்ளி 3.60%; தமிழ்ப்பள்ளி 1.34%.

இந்த மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்று கணக்கிடும்போது 9வது மலேசிய திட்டத்தில் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30 காசும், தமிழ்ப்பள்ளி  மாணவனுக்கு ரிம10.55 காசும் சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 காசும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனமொழிப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த பிரிட்டீஷ் காலனித்துவ மலாயா அரசாங்கமும் இதைப் போன்ற நிதி ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. 1949 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை கீழே காணலாம்:

ஆங்கிலப்பள்ளி மாணவனுக்கு $188.88; மலாய்ப்பள்ளி மாணவனுக்கு $66.84; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு $55.84; சீனப்பள்ளி மாணவனுக்கு $8.72.

சீனப்பள்ளி அழிந்தால், தமிழ்ப்பள்ளியும் அழிந்துவிடும் என்பது காலனித்துவ மலாயா மற்றும் சுதந்திர மலேசிய அரசுகளின் கணிப்பு!

சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்நாட்டு குடிமக்கள். மலாய்ப்பள்ளி மாணவர்களைப்போல் அவர்களுக்கும் கடமைகள் உண்டு. கேள்வி: உரிமைகள் உண்டா?

தேவைப்பட்டால் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அக்கடமையிலிருந்து எவருக்கும் விதிவிலக்கு கிடையாது. நாட்டிற்காக இத்தனை விழுக்காடு சீனர்கள், இத்தனை விழுக்காடு இந்தியர்கள் போர்க்களம் செல்ல வேண்டும் என்ற “கோட்டா” கிடையாது. தேசியச் சேவைக்கு தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞனும் போர்க்களம் செல்ல வேண்டும், தேவைப்பட்டால் மடிய வேண்டும்.

அதே இளைஞர்கள் பள்ளி மாணவர்களாக இருக்கையில், பல்கலைக்கழக மாணவர்களாக இடம் பெறுவதற்கு, ஏன் “கோட்டா” முறைக்கு ஆளாக்கப்பட வேண்டும்?

கடமைக்கு “கோட்டா” இல்லை. உரிமைக்கு “கோட்டா” உண்டு! ஏன் இந்த வேறுபாடு?

“தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே”

“கோட்டா” முறையை அம்னோக்காரர்கள் மட்டும் நம் மீது திணிக்கவில்லை. இந்திய மலேசியர்களின் உரிமையை அந்த அடிப்படையிலாவது “ கொஞ்சம் பார்த்து கொடுங்கள்” என்று சென்னையில் ஆட்டோக்காரர்கள் கேட்பதுபோல நமது இந்தியத் தலைவர்களும் கெஞ்சுகிறார்கள்.

“பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையையும் பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும் என்பதை கல்வி அமைச்சுடனும், அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், சில வேளைகளில் போராடியும் பெற்று வந்திருக்கிறோம்”, என்று 1992 ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது ச.சாமிவேலு கூறியுள்ளார்.

வரி கட்டும் கடமையுடைய இந்தியர்களின் எண்ணிக்கையும் போர்க்களம் செல்ல வேண்டிய கடமையுடைய இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையும் இந்திய மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கோரப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரிங்கிட்களை வீணாக்கும் மலேசிய அரசாங்கத்திடம் முழு உதவி பெறாத தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் அரசாங்கப்பள்ளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது சிறிய தொகைதான்.

ச.சாமிவேலு கூறுகிறார், “தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை தற்போது நாம் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை, பள்ளிகளை Bantuan Modal, Bantuan Penuh என்ற பள்ளிகளின் பாகுபாட்டை களைவதாகும். நம்மைப் பொறுத்தவரை தேவைப்படும் இடங்களில் எல்லாம் Bantuan Penuh அதாவது, அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெறக் கூடிய பள்ளிகளாக நிதி பெற்று நிலத்தை வாங்குவதாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாட்டில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த நிதியில் தமிழ்ப் பள்ளிகளை Bantuan Penuh பள்ளிகளாக மாற்றத் தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே. எனவே, இந்தக் குறையைப் போக்குவதில் ம.இ.கா. தொடர்ந்து கல்வி அமைச்சுடனும், அரசாங்கத்துடனும் போராடி வரும்.”

1992 ஆம் ஆண்டில், அமைச்சர் ச.சாமிவேலு இது குறித்து கல்வி அமைச்சுடன் தொடங்கியப் போராடத்திற்கு ஆகஸ்ட் 2010 இல் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அவரின் பதிலைக் கேள்வியாக அளித்துள்ளார்: “அவர்கள் (இந்தியர்கள்) தங்களுக்கான இடத்தைத் (பள்ளிக்கான இடத்தை) தேடிக்கொள்ள முடியாதா?”

இதற்கு முன்னதாக 1.10.2000 இல் அன்றையக் கல்வி அமைச்சர் மூசா முகமட் கூறிய கருத்தும் மேலே தரப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்க வந்தவர்களுக்கு இதைக்கூடச் சொல்ல வேண்டியுள்ளது என்று முகைதின் யாசின் கூறுவதுபோல் அவரின் பதில் இருக்கிறதல்லவா?

2005 ஆம் ஆண்டில், ச.சாமிவேலு தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் முழு உதவி பெறும் அரசாங்கப் பள்ளிகளாக்கப்பட வேண்டும் என்பதைச் சற்றுக் கடுமையாகவே வலியுறுத்தினார்.

“இந்தியர்கள் ஏழைகள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். அவர்களின் ஊதியம் அவர்களின் அன்றாடத் தேவைகளுக்குகூட போதியதாக இல்ல¨. அவர்களால் எப்படி தமிழ்ப்பள்ளிக்கூடங்களை கட்ட முடியும்?”, என்று சுட்டிக்காட்டிய அவர் காலத்திற்கு ஒவ்வாத பழையச் சட்டங்களை மாற்ற வேண்டும், அரசாங்கம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை நிர்மாணித்து பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தாம் படித்த பத்து ஆராங் தமிழ்ப்பள்ளிக்கு இரண்டு மாடி கட்டடங்கள் கட்டுவதற்கான வரைபடங்களைத் தயார் செய்து அதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு அவர் அமைச்சராக இருந்தபோது பிரதமரைக் கேட்டிருந்ததாகவும் ஆனால் அதற்கு இன்று வரையில் பணம் கிடைக்கவில்லை என்றும் சாமிவேலு மின்னல் எப்எம் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கும் இறுதிக் குறிக்கோளைக் கொண்டுள்ள அம்னோ அதன் கொள்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துள்ள ச.சாமிவேலு தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு புதிய வியூகத்தை கண்டுள்ளார். தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுக்கும்படி அறைகூவல் விட்டுள்ளார்.

53 ஆண்டுகால சுதந்திர மலேசிய வரலாற்றில் நாட்டை ஆண்டுவரும் கூட்டணியின் பங்காளியான ச.சாமிவேலு தமிழ்ப்பள்ளிகள் அவரது அரசாங்கத்தால் அனாதைகளாக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த இயலாமல் தமது கட்சியின் கிளைகள் அவை இயங்கும் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரின் கோரிக்கையைப் பின்பற்றி பலர் தமிழ்ப்பள்ளிகளை கோயில்கள் தத்தெடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

சாமிவேலு கேட்காத நேரமில்லை, அனுப்பாத மகஜர் இல்லை. ஆனால் கேட்டது கிடைப்பதில்லை. கேட்டுக் கேட்டு அலுத்துப்போன ச.சாமிவேலு அரசாங்கத்திடம் இனிமேல் எதையும் கேட்கப் போவதில்லை. கடையை மூடுவோம் (“We won’t ask anything from the government anymore. We will close shop.”) என்று விரக்தியின் உச்ச கட்டத்திலிருந்து அவர் கதரியுள்ளார்.

ச.சாமிவேலு கடையை மூட மாட்டார் என்பது அம்னோவிற்கு தெரியும். அப்படியே அவர் மூட முயற்சித்தாலும் அவருடைய சீடர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் பிழைப்பிற்கு அக்கடை அடித்தளமாகும். ஆனால், இப்போது அவரது அத்தியாயத்தை மூடும் முயற்சி அம்னோவினர் ஈடுபட்டுள்ளனர்!

தமிழ்ப்பள்ளிகள் அவ்வளவு மோசமாக இல்லை!

அதே நேரத்தில், தமிழ்ப்பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கில் மூச்சு விடும்போதெல்லாம் அரசாங்கம் வாரி வழங்குவதாக அம்னோவின் தயவில் வாழ்க்கை வண்டியை ஓட்டும் சில இந்தியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட் மானியமாக கொடுத்துள்ளதாக கூறிக்கொள்கின்றனர். இந்த மானிய அளிப்பை ஏன் கல்வி அமைச்சர் அறிவிப்பதில்லை?

இந்தியர்களின் பிரச்னைகளை, முக்கியமாக தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளை, கவனித்து களையெடுக்கப்போவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் அமைச்சரவையின் சிறப்புக்குழு ஒன்றை அன்றையக் கல்வி அமைச்சர் ஹுசாமுடின் தலைமையில் அமைத்திருந்தது. இப்போது அக்குழு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

அக்குழுவில் இரு இந்திய துணை அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்- எஸ்.கே.தேவமணி மற்றும் டி.முருகையா.

இரு ஆண்டுகளுக்கு முன்பு அக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர், ஹிசாமுடின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் அந்த இரு துணை அமைச்சர்களும் இருந்தனர்.

“சில தரப்பினர் வர்ணிப்பதுபோல தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று சிறப்புக் குழு அறிந்துள்ளது (“the committee found that the overall situation at Tamil primary schools was not as bad as painted by some parties.”) என்று ஹிசாமுடின் பகிரங்கமாக கூறினார்.

கூட இருந்த இரு துணை அமைச்சர்களும் புன்னகை பூத்தனர். ஆனால், டி. முருகையா இக்கூட்டம் நடந்த நாளிலிருந்து சரியாக 16 நாள்களுக்கு முன்பு “நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது”, (“The condition of many Tamil schools in the country was very depressing”)என்று கூறியிருந்தார்.

ஏன் இந்த பித்தலாட்டங்கள்?

சில சீன மற்றும் இந்தியர்களுக்கு பதவி பிச்சை போடும் அம்னோ இந்நாட்டிலுள்ள சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை அழிப்பதற்கான இறுதிக் குறிக்கோளைக் கொண்டுள்ளது என்பதை இத்தலைவர்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக கூறாமல் மறைக்கிறார்கள். அக்கொள்கையை அம்னோ அகற்ற வேண்டும் என்று இவர்கள் பகிரங்கமாக கூறவில்லை.

அம்னோவின் இந்த தாய்மொழிப்பள்ளி அழிப்புக் கொள்கையை மானியம் என்ற பெயரில் மூடிமறைக்கிறார்கள்.

இந்தப் பள்ளிக்கு மானியம், அந்தப் பள்ளிக்கு மானியம் என்ற அறிவிப்புகளுக்குக் குறைவில்லை. அறிவிக்கப்பட்ட மானியம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்வி. வழங்கப்பட்ட மானியம் முழுமையாக பள்ளிக்குக் கிடைத்ததா என்பது வேறு கேள்வி.

மானியம் வழங்கும் கொடை வள்ளல் அம்னோ அரசாங்கம் அதன் ஐந்தாண்டு திட்டங்களில் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதிக்கீட்டில் மலாய்ப்பள்ளிகளுக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ஏன் மலாய்ப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.55; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50?

இக்கேள்வியை எந்த இந்திய அமைச்சராவது, ஏன் சீன அமைச்சர்கள்கூட, கேட்டதுண்டா?

தாய்மொழிப்பள்ளிக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் இவ்வளவு கெடூரமான வேறுபாடு காட்டுகிறது என்பதை அறியாத அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால், அறிந்தும் அறியாதவர்கள்போல் நடிக்கிறார்கள் என்றால், பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

ஒரு கெராக்கான் துணை அமைச்சரிடம் இக்கேள்வி கேட்கப்பட்டபோது அவர் விழித்த விழியைக் கண்டு ஆந்தை கூட பயந்து விடும். அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறான வேறுபாடுகளை அமல்படுத்தி வந்தால், சீன, இந்திய மாணவர்களில் பலர் “பெந்தோங் காளியாக” மாறுவர், மாறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஓர் இந்திய அமைச்சரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்ப்பள்ளிகளின் தரம் மலாய்ப்பள்ளியின் தரத்திற்குச் சமமாக உயரும்போது மேம்பாட்டு நிதி ஒதுக்கீடும் மலாய்ப்பள்ளிக்கான ஒதுக்கீட்டிற்கு உயரும் என்றார்.

நிதி ஒதுக்கீட்டிற்கு தரம்தான் அடிப்படை என்று அந்த அமைச்சர் கூறியதால், சீனப்பள்ளிகளின் தரம் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தைவிட உயர்ந்ததா என்ற அடுத்த கேள்விக்கு அவர் “ஆம்” என்று பதிலளித்தார். அதன் அடிப்படையில் சீனப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு தமிழ்ப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீட்டைவிட கூடுதலாகத்தானே இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் அவர் “ஆம்” என்று உறுதியாகக் கூறினார்.

அப்படியானால், தரம் குறைந்த தமிழ்ப்பள்ளிக்கு ரிம10.55 தும் தரம் உயர்ந்த சீனப்பள்ளிக்கு ரிம4.50 தும் ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் என்று அவரிடம் வினவியபோது, அதிர்ச்சி ததும்பிய அவரது முகத்தைக் காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது!

சமீபத்தில் நடந்த உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலின்போது அம்னோவால் தேர்வு செய்யப்பட்ட பாரிசான் வேட்பாளரிடம் இந்த நிதி ஒதுக்கீடு மற்றும் அம்னோவின் இறுதிக் குறிக்கோள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படி, அப்படி என்றெல்லாம் பதில் கூற முயற்சித்த அவர், இறுதியில் “நான் இக்கேள்விகளுக்குத் தேர்தலுக்குப் பின்னர் பதில் அளிப்பேன்” என்றார்.

மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு சீனப்பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மசீச அமைச்சர்களுக்கும் பதவி முக்கியமாதலால், இவ்விவகாரம் குறித்து அவர்கள் மௌனம் சாதிக்கின்றனர்.

அச்சமூகத்திடம் ஓரளவிற்கு பொருளாதார வசதி தற்போதைக்கு இருப்பதால் சீனமொழிப்பள்ளிக்கூடங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன என்ற நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.

சீனமொழிப்பள்ளிகள் செவ்வனே இயங்குவதற்கு அச்சமூகத்திடம் போதுமான வசதி இருக்கிறதென்றால், உலுசிலாங்கூர், ராசா கிராமத்திலுள்ள பழைய சீனப்பள்ளியைப் புதுப்பிக்க ரிம3 மில்லியன் தருகிறேன், பாரிசானுக்கு வாக்களியுங்கள் என்று அங்குள்ள சீன வாக்காளர்களிடம் பிரதமர் நஜிப் பேரம் பேசியிருக்க முடியுமா?

சீனமொழிப்பள்ளிகளுக்காக அச்சமூகம் பல பில்லியன்களை அளித்துள்ளது. ஆனால், அவர்களால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க இயலாது என்று டாக்டர் குவா கியா சூங் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மலாய்க்காரர்கள் சோம்பேறிகள். மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் என்றெல்லாம் மற்றவர்கள் கூறுவதுண்டு. ஆனால், அவர்கள் மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டே மற்றவர்களுக்கு குழி பறிப்பதில் வல்லவர்கள் என்பதை நிருபித்துள்ளனர்.

அவர்களுடைய அத்திறமையின் இன்னொரு அங்கம்தான் தாய்மொழிப்பள்ளிகளுக்கு அவர்கள் பறித்துக்கொண்டிருக்கும் குழி!

52 ஆயிரம் கோடி ரிங்கிட்டை விழுங்கிவிட்டு நாங்கள் இன்னும் ஏழைகள்தான் என்று தம்பட்டம் அடிக்கும் அம்னோக்காரர்களின் தலைவர்களான மகாதீரை ஒரு “தீரர்” என்றும், படாவியை “என்றுமே எங்கள் தலைவர்” என்றும், நேற்று வந்த நஜிப்பை “நான் கண்ட பிரதமர்களில், புரிந்துணர்வு உடையவர்” என்றும் வாழ்த்தி ஐஸ் வைத்தால் கருணை மழை பொழிவார்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது.

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோள் திட்டம் இன்னும் தொடர்கிறது என்பது தெரிந்திருந்தும் செப்டம்பர் 17, 2010 இல் “தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக ஒன்றும் செய்யப்படவில்லை என்று அரசாங்கத்தைக் குறைகூறக்கூடாது. ‘அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவி புரிய அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கான தீர்வை நாம் முதலில் வழங்க வேண்டும்’” (“The government should not be blamed for not doing much for Tamil schools. ‘The government is ready to assist in solving the problem. But we must give that solution first.’”), என்று மஇகா தலைவர் ச.சாமிவேலு கூறியுள்ளார்.

இக்கூற்றை என்னவென்று கூறுவது? கடந்த முப்பது ஆண்டுகளாக இவர் வழங்காத தீர்வுகளா!

1992 ஆம் ஆண்டில், தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு “தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே” என்ற தீர்வை இவர் வழங்கியுள்ளார். ஒரு வேளை, அந்த நிதியை இந்தியச் சமூகமே வழங்கியிருந்தால், அரசாங்கம் பிரச்னையைத் தீர்த்திருக்கும் என்று இப்போது கூறுகிறாரா?

2005 ஆண்டில், இந்தியர்கள் ஏழைகள். தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. பந்துவான் மோடல், பந்துவான் புனோ என்பதெல்லாம் பழையச் சட்டங்கள். காலம் மாறிவிட்டது. தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கம்தான் கட்டி பராமரிக்க வேண்டும் என்று பூச்சோங்கில் இடி முழக்கத்துடன் தமது தீர்வைக் கூறினார்.

இவர் வழங்கிய தீர்வுகள் இருக்கட்டும். மார்ச் 6, 2008 இல் இவரின் புரிந்துணர்வு மிக்கத் தலைவர் நஜிப் ரசாக் பொதுத் தேர்தலை முன்னிட்டு கோலாலம்பூரில் நடந்த மஇகா கூட்டத்தில் உரையாற்றியபோது தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை முன்வைத்தார்: “தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் இடையில் வேறுபாடு இருக்காது.”

இதனைவிடச் சிறந்த தீர்வு ஒன்றை இவர் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறாரா?

மக்களுக்குப் பித்தம் ஏறினால், அவர் என்ன செய்வார்கள் என்பதை மார்ச் 8 இல் காட்டியுள்ளனர் என்பதை அரசியல் கட்சி தலைவர்கள் மறந்து விட்டு தீர்வு வருகிறது, தீர்வு வரும் ஆனால் வராது என்று கூறிக்கொண்டே காலத்தைக் கடத்தி விடலாம் என்று செயல்படக்கூடாது.

நிலம், நிதி உண்டு, மனம் உண்டா?

மலாயாவின் பல இலட்சக்கணைக்கான ஏக்கர் வெப்ப மண்டல காட்டை தங்களுடைய வெறும் கைகளைக் கொண்டே அழித்து இந்நாட்டை சுவர்ண பூமியாக்கிய இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு நிலம் இல்லை என்ற கூற்றை அம்னோக்காரர்கள் நிறுத்த வேண்டும்.

அம்னோக்காரக்களுக்கு கூஜா தூக்கும் வேலையை இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் நிறுத்த வேண்டும்.

நிலம் இருக்கிறது. அதைக் கையகப்படுத்துவதற்கு நில கையகச் சட்டம் 1960 இருக்கிறது.

நிதி ஒரு பிரச்னையே இல்லை. மிகச் சிறிய தொகைதான் தேவைப்படுகிறது. ஒரு கறிப்பாப்புக்கு ரிம3.40 கொடுக்கும் அளவிற்கு வளமுடைய மலேசிய அரசாங்கத்திற்கு ஒரு கிராமத்திற்கு ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நிதி உண்டு.

மனம் உண்டா? இதுதான் கேள்வி. நிச்சயமாக, அம்னோ அரசாங்கத்திற்கு அந்த மனம் கிடையாது.

அம்னோ விரும்புகிறதோ இல்லையோ, அரசமைப்புச் சட்டம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டி அவற்றைப் பராமரிக்கும் கடமையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

அரசமைப்புச் சட்ட விதிகள் 12 (1), 74 மற்றும் 80 ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டி அவற்றை பராமரிக்க வேண்டியது மலேசிய அரசாங்கத்தின் பொறுப்பு என்று பலர் கூறியுள்ளனர்.

மஇகாவின்   முன்னாள் பொதுச்செயலாளரும் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான ஜி. வடிவேலு, தமிழ்ப்பள்ளிக்கூடங்களைக் கட்டுவதும் அவற்றைப் பராமரிப்பதும் அரசாங்கத்தின் கடமை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

அதே நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார் அரசமைப்புச் சட்ட வல்லுனர் நிறைநிலைப் பேராசிரியர் சாட் சலீம் பரூகீ.

ஆனால், தாய்மொழிப்பள்ளி மாணவர்களின் உரிமைகளுக்குத் தடையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அவர்களில் முக்கியமானவர்கள் அம்னோக்காரர்களும் அவர்களை ஆதரிக்கும் இதர இன கட்சிகளின் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றும் கட்சிகளின் தொண்டர்களும்தான்.

தாய்மொழிப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை விரும்பும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய குழந்தைகளின் உரிமைக்காகப் போராட இந்த விவகாரத்தைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்ப்பள்ளி மாணவன் இரண்டாம் தர குடிமகனல்ல. அவனுக்கு கடமைகள் இருப்பதுபோல் மறுக்க முடியாத உரிமைகளும் உண்டு. அந்த உரிமைகளை மறுக்கும் அரசியல்வாதி, அவர் யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, தூக்கி எறியப்பட வேண்டும். இது தனயனுக்கு தாயும் தந்தையும் ஆற்ற வேண்டிய கடமை: உரிமைப் போராட்டம்.

நன்றி:திசைகள், 2010