விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை: பொது சுகாதாரத்துறை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. சென்னை : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், ‘விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் கொரோனா பரிசோதனை இனிமேல் தேவையில்லை. இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. விமான பயணிகளில் அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வெப்பமானி மூலம் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று மற்றொரு சுற்றறிக்கையில், ‘அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் இதர நோய்களுக்கான சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது.

அதாவது, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், கர்ப்பிணி உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படுவதை உறுதி செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

 

 

-mm