கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி – தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர்.

முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

 

-mm