கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார்

கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பார் என்றும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் காங்கிரஸ் கட்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூறுகையில், “சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். டிகே சிவக்குமார் ஒரே துணை முதல்வராக இருப்பார், மேலும், மக்களவைத் தேர்தல் முடியும் வரை சிவகுமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மே 20 ம் தேதி (சனிக்கிழமை) பதவி ஏற்றுக்கொள்வார்கள். ஒரே கருத்துள்ள கட்சிகளை இந்தப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இருவருக்கும் இடையில் சுழற்சி முறையிலான அதிகாரப்பகிர்வு குறித்து கேட்ட போது,”சுழற்சி முறையிலான அதிகாரப்பகிர்வு என்பது கர்நாடகா மக்களுடனே இருக்கும்” என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், கர்நாடகா மேலிடப்பார்வையாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் முதல்வராக தகுதியுள்ளவர்களே என்றார்.

ஐந்து நாள் இழுபறிக்கு முடிவு: காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குறித்து யார் என்பது குறித்து கடந்த 5 நாட்கள் நீடித்த இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மே 10ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தது. இருந்த போதிலும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையில் முதல்வர் பதவி குறித்த போட்டி வெளிப்படையாக நிலவியதால் அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கட்சின் தேசிய தலைவர் கார்கேவிடம் ஒப்படைத்து ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முடிவு எட்டப்பட்டுள்ளது.

6.5 கன்னடியர்களுக்கான 5 வாக்குறுதிகள்: இதற்கிடையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், “கர்நாடகா மக்களின் வாழ்வில் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் நலன்களை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. நாங்கள் 6.5 கோடி கன்னடிகர்களுக்கு கொடுத்த 5 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

-th