கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழப்பு 6 ஆக உயர்வு

மணிப்பூரில் உள்ள விஷ்ணுபூர் -சூரசந்த்பூர் எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயம் அடைந்தனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி இனத்தவர்கள் கடந்த மே 3-ம் தேதி பேரணி நடத்தினர். அதில் ஏற்பட்ட மோதல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் விஷ்ணுபூர்-சூரசந்த்பூர் எல்லையில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

நிவாரண முகாம்களில் தங்கியிருந்த சிலர்தங்கள் வீடுகளை பாதுகாப்பதற்காக விஷ்ணுபூர் மாவட்டத்தின் உகா தம்பக் கிராமத்துக்கு திரும்பினர். இங்கு நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் தந்தை-மகன் உட்பட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காக சிலர் ஆயுதங்களுடன் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பூஜாங்க் மற்றும் சாங்டோ கிராமத்துக்குள் புகுந்து சிறிய ரக ராக்கெட் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர், சிலர் காயம் அடைந்தனர்.

அதே நேரத்தில் விஷ்ணு மாவட்டத்தின் தேரகோங்சாங்பி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் ஒருவர் உட்பட 3 பேர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர்.

இதேபோல் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இரு கிராமங்களிலும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாங்கோல் பகுதியில் சில வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

மணிப்பூரில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இம்பாலில் போராட்டங்களும் நடந்தன. மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் குண்டு காயத்துடன் கைது செய்யப்பட்டார். மணிப்பூருக்கு மேலும் 10 கம்பெனி பாதுகாப்பு படையினரை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 

 

-th