இராகவன் கருப்பையா – அண்மையில் நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சியின் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரஃபிஸியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
அவருடைய இந்தத் தோல்வியானது, தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டு மக்களுக்கு ‘புனை வேடத்தில் கிடைத்த ஆசீர்வாதமாக’ பலர் கருதுகின்றனர்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் 3ஆவது அணி ஒன்று நமக்கு வேண்டும் என ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு இந்த சூழல், ‘பழம் நழுவி பாலில் விழுந்த கதை’யாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியொரு நிலை ஏற்படுமேயானால், உணர்ந்தோ உணராமலோ பிரதமர் அன்வாரின் குடும்ப அரசியல்தான் அதற்கு வித்திட்டதாகக் கருதப்படுவது உறுதி.
நம் நாட்டில் உண்மையிலேயே அதீத ஆற்றலுடைய இளம் அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் ரஃபிஸி முதலிடத்தில் உள்ளார் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
பி.கே.ஆர். கட்சியின் முன் வரிசைக்கு அன்வாரின் மகள் நூருல் தனது சுய ஆற்றலைக் கொண்டு முன்னேறினார் எனும் தோற்றம் உருவாக்கப்படுகிற போதிலும் உண்மையில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.
குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் ரஃபிஸி திட்டமிடப்பட்டு ஓரங்கட்டப்பட்ட விவகாரம் யாருக்குத்தான் தெரியாது!
ஏற்கெனவே அறிவித்திருந்தபடி தமது அமைச்சர் பதவியை எந்நேரத்திலும் அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிற போதிலும் கட்சியில் தமது எதிர்காலம் பற்றி இதுவரையில் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
இருந்த போதிலும் அவரை ஈர்ப்பதற்கு பல கட்சிகள் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவருடைய அரசியல் ஆளுமைக்கு இது பெரியதொரு அங்கீகாரம் என்றால் அது மிகையில்லை.
அதே சமயம் ரஃபிஸி புதிய கட்சியொன்றைத் தொடங்கி 3ஆவது அணிக்கு வித்திட வேண்டும் என பெரும்பகுதி இந்திய சமூகத்தினர் உள்பட மற்றொரு சாரார் விரும்புகின்றனர்.
அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் ஒற்றுமை அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்தோரும் தீவிர சமயக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சியைப் பிடிக்காதவர்களும் புதியதொரு அணிக்காகக் காத்திருப்பதைப் போல் தெரிகிறது.
அண்மையில் நடந்த ஆயர் கூனிங் சட்மன்ற இடைத்தேர்தலில் 3 ஆவது அணியாகக் களமிறங்கிய பி.எஸ்.எம். கட்சிக்கு 6 விழுக்காடு வாக்குகள் கிடைத்தது இதற்குச் சான்றாகும்.
பி.கே.ஆர். கட்சித் தேர்தலில் ரஃபிஸியோடு சேர்த்து மேலும் பல திறமைசாலிகளும் ஓரங்கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக்ககரமான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் சிறந்த ஆற்றலுடைய, சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் வொங் சென், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.
மற்றொருவர், கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவராக இருந்த, செத்தியா வங்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இயற்கைவள சுற்றுப்புற சூழலுக்கான அமைச்சருமான நிக் நஸ்மி.
ரஃபிஸி தலைமையில் புதிய கட்சியொன்று உருவாகுமேயானால் இவர்களும் அதில் இணையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
அதோடு, அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினும் கூட ரஃபிஸியோடு கைக் கோர்க்கக் கூடும்.
ஆக ரஃபிஸி பி.கே.ஆர். கட்சியிலேயே நிலைத்திருப்பாரா, வேறொரு கட்சியில் இணைவாரா அல்லது புதியதொரு கட்சியைத் தொடங்குவாரா என்று அடுத்த சில மாதங்களில் நமக்குத் தெரிந்துவிடும்.