இராகவன் கருப்பையா – இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் 100 வயது நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தனதுத் தொடர் முயற்சிகளை இன்னமும் கைவிடாமல் இருப்பது நமக்கெல்லாம் சற்று வியப்பாகத்தான் உள்ளது
அவருடைய செயல்பாடுகளின் நோக்கம் நமக்கு எரிச்சலூட்டினாலும், இந்த வயதிலும் அவர் கொண்டுள்ள விடா முயற்சிக்கான சிந்தனை ஆற்றலை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் அவரை தற்போது பொருள்படுத்துவது இல்லை என்ற போதிலும் குறிப்பிட்ட ஒரு சாராரை வசீகரப்படுத்துவதில் அவர் வெற்றி காண்கிறார் எனும் உண்மையையும் நாம் மறுக்க முடியாது.
இருப்னும் ‘பெரிய குடை’ எனும் பெயரில் அவரால் ஈர்க்கப்பட்டவர்கள் தங்களுடைய அரசியல் சுயநலத்திற்காகத்தான் அவருடன் கைக் கோர்க்கின்றனர் என்பதையும் நாம் மறுக்கலாகாது.
கடந்த சுமார் 2 ஆண்டுகளாக பல தடவை மகாதீர் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி கண்டதும் எல்லாருக்கும் தெரியும்.
தற்போது மீண்டும் அதே பல்லவியைப் பாடி கூட்டத்தை சேர்க்கப் பார்க்கிறார். “மலாய்க்காரர்கள் ஒன்றிணைய வேண்டும். அன்வார் அரசாங்கத்தில் மலாய்க்காரர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டனர். மலாய் மொழிக்கும் ஆபத்து வந்துவிட்டது,” என அவர் பிதற்றுவது பெரும்பாலான மலேசியர்களுக்கு கேலியாகத்தான் உள்ளது.
இந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மலாய்க்காரர்களிடம் இல்லை என்றால் யாரிடம்தான் உள்ளது? என்னதான் அவர் சொல்ல வருகிறார்? என்றெல்லாம் அவருடையக் கூற்றை மக்கள் வேடிக்கையாகத்தான் பார்க்கின்றனர்.
அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் கடிதங்கள் மலாய் மொழியில் இல்லையென்றால் அவை திருப்பி அனுப்பப்படும் என கடந்த 2023ஆம் ஆண்டில் அன்வார் செய்த அறிவிப்பு மகாதீருக்குத் தெரியாதா என்ன?
மலாய் மொழிக்கு அன்வார் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கு இதை விட வேறு என்னதான் உதாரணம் தேவைப்படுகிறது?
ஆட்சி அதிகாரத்தைப் பற்றியும் மலாய் மொழியைப் பற்றியும் பேசினால் மலாய்க்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு தனக்கு பெருமளவில் ஆதரவளிப்பார்கள் என மகாதீர் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்.
இதுபோன்ற வலுவற்றப் பிரச்சாரங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது என்பது ஒருபுறமிருக்க, மகாதீரின் உள்நோக்கம் என்ன என்பதும் பெரும்பாலோருக்குத் தெரியும்.
தனது 2 மகன்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் அன்வார் மீதான தனது அழுத்தத்தை மகாதீர் தீவிரப்படுத்தினார் என்பதும் வெள்ளிடை மலை.
எனினும் பெரிக்காத்தான் கூட்டணி, ‘குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க’ முற்படுவதையும் மக்கள் உணராமல் இல்லை. அக்கூட்டணியினர் ‘ருசி கண்ட பூனை அல்லவா!’
மகாதீரின் முயற்சியில் நடப்பு ஆட்சி கவிழ்ந்தால் அவர்களுக்குத்தானே ஆதாயம்! அநேகமாக இத்தகைய ஒரு சூழலை எதிர்பார்த்துதான் பாஸ் கட்சியும் பெர்சத்துவும் அவருக்கு உறுதுணையாக இருப்பதைப் போல் தெரிகிறது.
ஆக சம்பந்தப்பட்டத் தரப்பினர் தங்களுடைய சுயநல அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கத்தில்தான் ‘பெரிய குடையை’ கையிலெடுத்துள்ளனர் எனும் உண்மையை மக்கள் உணர்ந்துள்ள பட்சத்தில் இம்முறையும் மகாதீரின் முயற்சி ஒரு புஸ்வானமாகவே முடியும் என்றே தெரிகிறது.