விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றிய சுனிதா வில்லியம்ஸ்

டெல்லி: அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது முகாமிட்டுள்ள இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி பறந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது சுனிதா குறிப்பிட்டார். சுனிதாவின் தந்தை குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவரது தாயார் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாத கால ஆய்வுப் பயணமாக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார் சுனிதா என்பது நினைவிருக்கலாம். இது அவரது 2வது விண்வெளி பயணமாகும்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்தி தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு அருமையான நாடு. அந்த நாட்டின் ஒரு அங்கமாக நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.

நான் ஒரு அரை இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் எனக்குத் தெரியும். இந்த நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் சுனிதா.