இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா. தலையிடும்: பான் கி-மூன்

banki_moonஇந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி-மூன், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் எடுத்துவரும் முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லும் அவர், அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியதாவது: “”எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதே நேரம், பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்வது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இதனை நான் வரவேற்கிறேன்.

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் மட்டுமே சமரச நடவடிக்கைகளில் ஐ.நா பங்கெடுக்கும். அதுவரை இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை வளர்க்கவேண்டும். எல்லையில் பதற்றமான சூழல் நீண்டகாலமாக நிலவி வருகிறது. ஐ.நா-வின் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் போரைத் தவிர்ப்பதற்கு முடிந்தவரை முயன்றுவருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் அரசியல்ரீதியாக தலையிடுவது இல்லை என்பதால், இரு நாட்டு அரசுகளின் கையில்தான் தீர்வு உள்ளது” இவ்வாறு பான் கி-மூன் தெரிவித்தார்.

TAGS: