சகாயத்திடம் எஸ்.பி., அறிக்கை தாக்கல்

sagayamமதுரை :மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு மீது தன் பணிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முந்தைய எஸ்.பி.,யும் சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனருமான பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் எட்டு பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். முந்தைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

கிரானைட் குவாரி முறைகேடுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 2 பேருக்கும் சகாயம் விசாரணை குழு சம்மன் அனுப்பியிருந்தது. நேற்று அவர்கள் ஆஜராகவில்லை. எஸ்.பி., பாலகிருஷ்ணன் போலீசார் மூலம் சகாயத்திடம் அறிக்கை தாக்கல் செய்தார். கிரானைட் முறைகேடு குறித்து அவரிடம் எட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றிக்கு அவர் பதிலளித்திருந்தார்.

மேலும் அவர் பணிக் காலத்தில் முறைகேடுகளை தவிர்க்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியிருந்தார்.
தற்போது வேறு பணியில் இருப்பதால் விசாரணை கமிஷன் கோரிய விவரங்களை தாக்கல் செய்ய ஜூலை 21ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என முந்தைய கலெக்டரும், சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனருமான அன்சுல் மிஸ்ரா கேட்டு கொண்டார். அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை பெற்ற விவரங்களின்படி அறிக்கையை இறுதி செய்யும் பணியில் சகாயம் ஈடுபட்டுள்ளார்.

-http://www.dinamalar.com

TAGS: