விவசாயத்தில் ‘கோமியம்’ சத்தீஸ்கர் முதல்வர் உத்தரவு

ராய்பூர்; விவசாயத்தில், ‘கோமியம்’ எனப்படும், பசுக்களின் சிறுநீரை பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோமியத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று கூறியதாவது:விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது.

எனவே, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, கோமியத்தை பயன்படுத்தலாம் என, எனக்கு தோன்றுகிறது. இதற்கான சாத்தியங்கள் பற்றி, வேளாண் வல்லுனர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.இதற்கான செயல் திட்டத்தை, இரண்டு வாரங்களுக்குள் வகுத்து தர, மாநில தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Dinamalar