போரை நிறுத்துங்கள் – மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக் வலியுறுத்தல்

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார்.

உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷியா தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வலியுறுத்தி உள்ளார் சுதர்சன் பட்நாயக்.

ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடம் போரை நிறுத்துங்கள் என ஒருவர் வலியுறுத்தும் விதமாக

இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Malaimalar