ஹபீஸ் சயீத் மகன் பயங்கரவாதி என அறிவிப்பு – மத்திய அரசு நடவடிக்கை

மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு களை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம்பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்கப்பட்டு தூக்கில் போடப்பட்டார்.

இந்த தாக்குதல்களை ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்களை நிறுவிய ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்தவாறு நடத்தினார். தற்போது இவர் பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் சிக்கி தண்டிக்கப்பட்டுள்ளார்.

இவரது மகன், ஹபீஸ் டல்ஹா சயீத் ஆவார். இவர் பாகிஸ்தானில் லாகூரில் வசிக்கிறார். இவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவராகவும், அதன் மத அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இவரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

ஹபீஸ் டல்ஹா சயீத், பாகிஸ்தான் முழுவதும் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் மையங்களுக்கு சென்று, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என மத்திய அரசு நம்புகிறது. எனவே அவர் சட்டப்படி பயங்கரவாதி என அறிவிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 35, உட்பிரிவு (1) உட்பிரிவு (ஏ) யின் ஷரத்து, ஒருவர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக நம்பினால் அவரை நான்காவது அட்டவணையில் பயங்கரவாதி என சேர்த்து அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Malaimalar