சுகாதார சேவையில் பொதுத்துறை-தனியார்துறை கூட்டு முயற்சி அவசியம்: குடியரசு துணைத்தலைவர்

கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இந்தியாவை ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிஃக்கியின் 16-வது ஆண்டு சுகாதார மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவை மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

நாட்டில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டாண்மை அவசியம், அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் கனவை நனவாக்க, சுகாதார சேவையில் பொதுத்துறையினரும்-தனியார்துறையினரும் இணைந்த பெரும் கூட்டு முயற்சி தேவை. கொரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை.

இந்தியா தனது குடிமக்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி செலுத்தியதுடன், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்துள்ளது. 1990 முதல் குழந்தை இறப்பு விகிதம் தடுப்பு போன்ற சுகாதாரக் குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் உள்ளது.

அனைவருக்கும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழைகள் மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான சுகாதார சேவை கிடைக்கும் இடைவெளி வெகுவாக குறைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

-mm