கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை- தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 21 லட்சம் வழங்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையில் 15 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகமும், 6 லட்சம் ரூபாயை தமிழக அரசும் வழங்கும்.

இதுதவிர, இந்த குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும், வீட்டுமனைப் பட்டாவும் அளிக்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஓட்டல் உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, அந்த ஓட்டலின் பொதுமேலாளர், ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது எந்திரமயமாக்கப்பட்டு, மனிதர்கள் பயன்படுத்தப்படுவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இத்தகைய விழிப்புணர்வு பணியில் சமூக ஊடகங்களும், தமிழக அரசும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து ஆணையம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

-mm