தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க, மத்திய அரசு முடிவு

டாடா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும். புதிய திட்டத்திற்கு, அக்டோபர் 30 ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படைக்கான போக்குவரத்து விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கு குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை மறுநாள் 30ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் கூறியதாவது: (இந்திய விமானப்படைக்கு) ஸ்பெயின் நிறுவனத்திடமிருந்து 56 சி-295 எம்.டபிள்யூ ரக போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்படி, 16 விமானங்கள் பெறப்படும். எஞ்சிய 40 விமானங்கள் டாடா மற்றும் டிசிஎஸ் கூட்டமைப்பு மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும்.

தனியார் நிறுவனம் மூலம் முதல் முறையாக இந்திய ராணுவத்திற்கான விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.21,935 கோடியாகும். விமானப்படைக்கான இந்த விமானங்கள் மக்கள் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விமானப்படைக்கான முதல் போக்குவரத்து விமானம் 2026 செப்டம்பர் மாதம் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

-mm