மும்பையில் அதிகரிக்கும் சின்னம்மைத் தொற்று

இந்தியாவின் மும்பை நகரில் சின்னம்மைத் தொற்று அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கிட்டத்தட்ட 7,000 பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் 10க்கும் அதிகமான பிள்ளைகள் தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

COVID-19 நோய்ப்பரவல் கட்டுப்பாடுகளின் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாய் மும்பை நகரில் சுமார் 20,000 பிள்ளைகள் சின்னமைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைத் தவறவிட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக நெரிசல் மிக்க குடியிருப்புப் பகுதிகள், சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் சின்னம்மைத் தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. கேரளம், குஜராத், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் சின்னமைத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

 

-smc