கடந்த ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை

2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் இந்திய சுற்றுலாவாசிகளுக்கு விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:- இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022-ம் ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளது. ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம்.
சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது உண்மை தான். இருப்பினும், விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதுடன், நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் அல்லாத நபர்களுக்கு பயண வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். சரியான தருணத்தில் விசா வழங்குவது என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியம் வாய்ந்தது மற்றும் அதுவே நிர்வாகத்தின் இலக்கும் ஆகும்.

மேலும் விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக, எச் மற்றும் எல் பணியாளர் விசாக்களை பெறும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 1 லட்சம் வாய்ப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில் மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும். மெக்சிகோவுக்கு அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடம் பிடிக்க கூடும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

-mm