ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி

பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டெலியோஸ்-2’ உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களை வணிகரீதியாக விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ராக்கெட் பயணத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் நேற்று மதியம் 2.19 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 19 நிமிடத்தில் 2 செயற்கைக் கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இதில் முதன்மை செயற்கைக் கோளான டெலியோஸ்-2 மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இது அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும். இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

இதனுடன் ஏவப்பட்ட லூம்லைட்-4 (16 கிலோ) எனும் சிறிய செயற்கைக் கோள், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கடல்வழி போக்குவரத்துக்கு உதவும்.

7 ஆய்வுக் கருவிகள்

இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 பகுதியில் ‘போயம்-2’ எனும் பெயரில் 3-வது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, பிஎஸ்-4பகுதியில் இஸ்ரோ, இந்திய வான் இயற்பியல் நிறுவனம் உட்பட 4 ஆராய்ச்சி மையங்களுக்கு சொந்தமான 7 ஆய்வுக்கருவிகள் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, பிஎஸ்-4 பகுதியின் உதவியுடன் இந்த ஆய்வுக் கருவிகள், புவியை வலம் வந்து அடுத்த ஒரு மாதத்துக்கு ஆய்வு மேற்கொள்ளும்.

ஏற்கெனவே வணிகரீதியாக சிங்கப்பூரின் டெலியோஸ்-1 செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் மூலம் இஸ்ரோ கடந்த 2015 டிச.16-ல் விண்ணில் செலுத்தியது. கடந்த 1993 முதல் இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 424 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி மூலம் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-th