24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர்.

மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர்.

இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் கப்பலையும் ஊழியர்களையும் பத்திரமாக மீட்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

ஈரான் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பல் எங்கள் நாட்டின் கப்பல் மீது மோதியது. இதில் எங்கள் நாட்டைச் சேர்ந்த 2 ஊழியர்கள் காணாமல் போய் உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

வளைகுடா கடல் பகுதியில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன், அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

 

 

-th