‘சீட் பெல்ட்’ அலாரத்தை நிறுத்தும் கருவி – 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை

‘சீட் பெல்ட்’ அணியச் சொல்லும் அலாரத்தை நிறுத்தும் கருவிகள் விற்பனையை தடுக்கும் வகையில் 5 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யும் போது ஓட்டுனர் உள்ளிட்ட அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டியது மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன் படி கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. சீட் பெல்ட் அணிய மறந்துபோனால் அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.

ஆனால் இந்த அலார ஒலி எச்சரிக்கையை தங்களுக்கு தொந்தரவாக கருதும் பயணிகள் அலாரத்தை தடுக்கும் விதமான கருவிகளை (கிளிப்) வாங்கி பொருத்திக் கொள்கிறார்கள். இந்த கருவிகள் அமேசான், பிளிப்காட், சினாப்டீல். ஷாப்க்லூஸ், மீஷோ போன்ற ஆன்லைன் தளங்களில் தாராளமாக கிடைத்து வருகிறது. இந்த 5 நிறுவனங்களும் இதுவரை 13,118 கருவிகளை விற்பனை செய்துள்ளன.

இதனை வாங்கி பயன்படுத்தியவர்கள் பலர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு ‘சீட் பெல்ட்’ அலார கட்டுப்பாட்டு கருவிகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துள்ளன.

இது தொடர்பாக பல்வேறு புகார்கள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு வந்தன. இந்த புகார்களை கருத்தில் கொண்டு தற்போது ஆணையம் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி கருவிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய உதிரி பாகங்கள் இனிமேல் அந்த தளங்களில் விற்பனை செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆணையத்தின் தலைமை ஆணையர் நித்தி கரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுபோல கருவிகளை தயாரித்த உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, கடந்த 2021-ம் ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 8,438 ஓட்டுனர்களும், 7,959 பயணிகளும் அடங்குவர். 39,231 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அவர்களில் 16,416 பேர் ஓட்டுனர்கள் ஆவர். சாலை விபத்தில் சிக்கியவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

-dt