2022-ல் சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்

கடந்த ஆண்டு சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் MyGovIndia வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் 8.95 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்னையில் முன்னணியில் இருக்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு 2.92 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. 1.76 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் சீனா 3ம் இடம் பிடித்துள்ளது. 1.65 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் தாய்லாந்து 4ம் இடத்திலும், 80 லட்சம் டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் தென் கொரியா 5ம் இடத்திலும் உள்ளன.

இரண்டாம் இடம் முதல் 5ம் இடம் வரை பெற்றுள்ள 4 நாடுகளின் கூட்டு டிஜிட்டல் பணபரிவர்த்தனையைவிட, இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகம். உலக அளவில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுமையான தீர்வுகள் மற்றும் பரவலான மக்கள் பயன்பாடு ஆகியவையே இதற்குக் காரணம். பணமற்ற பரிவர்த்தனையை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறைந்த செலவில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்று கிராமப்புற பொருளாதாரமும் மாற்றம் கண்டு வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் அதிக எண்ணிக்கை மற்றும் அதிக தொகை இரண்டிலும் இந்தியா முன்னணி வகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதில் சூழல் மாறிவிட்டது; டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான ஏற்பு அதிகரித்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது” என ரிசர்வ் வங்கி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

-th