‘கோவின்’ வலைத்தள தகவல்கள் கசிவு; 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கொரோனா தடுப்பூசி பணிக்கு பயன்படுத்தப்பட்ட கோவின் வலைத்தள தகவல்கள் கசிவு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பற்றிய தகவல்களை சேமித்து வைப்பதற்காக, ‘கோவின்’ என்ற வலைத்தளம் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் இதில் உள்ள பயனாளர்களின் தகவல்கள், ‘டெலிகிராம்’ செயலி மூலம் கசிந்ததாக கூறப்பட்டது.

தகவல்கள் கசிவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. ஆனால், ‘கோவின்’ வலைத்தளம் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், அதன் தகவல்கள் வெளியானதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ‘கோவின்’ வலைத்தள தகவல்கள் கசிவு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், பீகாரை சேர்ந்தவர். மற்றொருவர் சிறுவன் ஆவார். தகவல்களை கசிய விட பீகார் நபர், ‘டெலிகிராம்’ செயலியை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

 

-dt