வியட்நாமுக்கு போர்க்கப்பலை வழங்கியது இந்தியா

இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பல், வியட்நாம் கடற்படைக்கு நேற்று முன்தினம் பரிசாக வழங்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம் நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்குப் பகுதி சீன எல்லையை ஒட்டி இருக்கிறது. கிழக்குப் பகுதியில் தென் சீனக் கடல் இருக்கிறது. எல்லைப் பகுதி மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடிக்கிறது.

இதன் காரணமாக கடந்த 1979-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது வியட்நாமுக்கு ராணுவ ரீதியாக இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. ஒரு மாதம் நீடித்த போரில் சீனா பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இந்தசூழலில் வியட்நாம் கடற்படைக்கு இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கிர்பான் என்ற போர்க்கப்பல் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டில் கிர்பான் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 1,450 டன் எடை,90 மீட்டர் நீளம், 10.45 மீட்டர் அகலம் கொண்ட இந்த போர்க்கப்பலில் 12 அதிகாரிகள், 100 மாலுமிகள் பணியாற்றினர். இதில் அதிநவீன ஏவுகணைகள், நாசகார ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

வியட்நாமின் கேம் ரான் நகரகடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் கிர்பான் போர்க்கப்பலை இந்திய கடற்படைத் தளபதி ஹரிகுமார் வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.

விழாவில் தளபதி ஹரிகுமார் பேசும்போது, “வியட்நாம் கடல்பகுதி பாதுகாப்பில் புதிய போர்க்கப்பல் முக்கிய பங்கு வகிக்கும். தென்சீனக் கடல் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்தியாவும் வியட்நாமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

தென் சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன்காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது.

இந்த கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த ரோந்து பணியில் இந்திய கடற்படை போர்க்கப்பல்களும் அண்மையில் இணைந்தன.

 

 

 

-th