மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

எதிர்பார்க்கப்பட்டபடியே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தீர்மானத்தை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார்.

முன்னதாக, மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

‘‘மணிப்பூர் சம்பவம் குறித்து பதில் அளிக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். எனவே, எங்களது கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதில் ஒத்துழைப்பு அளிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிதான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் சூழலில் மழைக்காலக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒருநாள்கூட இரு அவைகளும் முழுவீச்சில் செயல்படாத நிலையில் இன்னும் 13 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை அனுமதிக்க மக்களவை சபாநாயகர் 10 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழலில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கான சாத்தியக்கூறுகள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

 

 

 

-th