இமாச்சலில் மேக வெடிப்பு, நிலச்சரிவு, கோயில் இடிபாடுகளில் சிக்கி 21 பேர் பலி: முதல்வர் நேரில் ஆய்வு

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் கோயில் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்ததாக முதல்வர் சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இடைவிடாமல் பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்கள், குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இமாச்சலில் மட்டும் இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.7000 கோடி என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். இமாச்சலில் பிலாஸ்பூர், சம்பா, ஹமீர்பூர், காங்ரா, குலு, மாண்டி, சிம்லா, சீர்மார், சோலன், உனா, கினார், லாஹால், ஸ்பிதி உள்ள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்டிலி இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேகவெடிப்பில் 7 பேர் பலி: இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக சோலன் பிரிவு ஆணையர் மன்மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.

கோயில் இடிந்து விழுந்து விபத்து: இதேபோல் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது கோயிலில் 50 பேர் இருந்ததாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்விடத்துக்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் சுக்வீந்தர் சிங், “கோயில் இடிபாடுகளுக்குள் இன்னும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகமிக அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிலச்சரிவு அபாயப் பகுதிகள், ஆறுகள் உள்ள பக்கம் மக்கள் செல்ல வேண்டாம். மழை நின்றவுடன் சீரமைப்புப் பணிகள் தொடரும். நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றாலும் கூட மக்களின் பாதுகாப்பே பிரதானம்” எனத் தெரிவித்தார்.

பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் கடந்த 24 மணி நேரம் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சலில் இன்று அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 621 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 236 மாண்டியில் உள்ளன. சிம்லாவில் 59, பிலாஸ்பூரில் 40 உள்ளன. இப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

 

-th