ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று தொடக்கம்

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை கொண்டாட்டம், ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடக்கம் கோலாகலமாக நடைபெற்றது. பெண்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

இன்று முதல் இனி வரும் 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாட்டமாக மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று ஓணம் விருந்து மிகச் சிறப்பாக நடைபெறும்.

ஓணம் பண்டிகை இன்று தொடங்கியதையடுத்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை தொடக்க நாளான இன்று மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவை வரவேற்றனர். தோவாளை பூ மார்க்கெட்டிலும் இன்று பூக்கள் வாங்க ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

 

-mm