நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – இஸ்ரோ தலைவர்

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கிய நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது. ஆனால், நாம் நம் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். நமக்கு அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது. விண்வெளித்துறை வளர்ச்சியடைய வேண்டும், அதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியடையும். அது தான் எங்கள் இலக்கு. பிரதமர் மோடி எங்களுக்கு வழங்கிய இலக்கை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார்.

 

-dt