ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 56, ஷுப்மன் கில் 58 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 8, கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மாற்று நாளான நேற்று ஆட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. எனினும் மழை காரணமாக 3 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் 4.40 மணி அளவிலேயே தொடங்கியது. விராட் கோலியும், கே.எல்.ராகுலும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தி ரன்களை வேட்டையாடினார்கள்.

ஷதப் கானுக்கு எதிராக கே.எல்.ராகுல் அடித்த ‘ஸ்வாட் ஃபிளிக்’ சிக்ஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மட்டையை சுழற்றிய கே.எல்.ராகுல் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 6-வது சதத்தை விளாசினார். மறுபுறம் இப்திகார் அகமது, நசீம் ஷா ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்ட விராட் கோலி 84 பந்துகளில், 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் தனது 47-வது சதத்தை விளாசினார்.

இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 94 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு கூட்டாக 233 ரன்கள் வேட்டையாடினர்.

கடந்த காலங்களில் அச்சுறுத்தலாக திகழ்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடி 10 ஓவர்களை வீசி 79 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளரான ஷதப் கான் 10 ஓவர்களை வீசி 71 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

357 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இமாம் உல் ஹக் 9 ரன்களில் பும்ரா வீசிய பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கேப்டன் பாபர் அஸம் 24 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் போல்டானார். பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது பஹர் ஸமான் 14, மொகமது ரிஸ்வான் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இரவு 9.20 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. ரிஸ்வான் 2 ரன்னில் ஷர்துல் தாக்குர் பந்தில் வெளியேறினார். பஹர் ஸமான் 24, ஆஹா சல்மான் 23 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் நடையை கட்டினர். தொடர்ந்து ஷதப் கான் (6), இப்திகார் அகமது (23), பாஹீம் அஷ்ரப் (4) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பினார் குல்தீப் யாதவ். முடிவில் 32 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காயம் காரணமாக நசீம் ஷா, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் களமிறங்கவில்லை.

228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 புள்ளிகளை முழுமையாக பெற்றது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று இலங்கையுடன் மோதுகிறது.

 

 

-th