நாமக்கல் தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 16ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா (38) என்ற மனைவி மற்றும் மகள் கலையரசி (14) மகன் பூபதி (12) ஆகியோர் உள்ளனர். கடந்த 16ஆம் தேதி இரவு சுஜாதா தனது மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ் (56), அண்ணி கவிதா (50) ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஹோட்டலில் வாங்கிவந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியுடன் உணவு சாப்பிட்ட தாய் அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி கலையரசி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே நாள் இரவு இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

-th